புதுடெல்லி: டெல்லி புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 15ம் தேதி தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர்ராவின் மகள் கவிதா அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஹைதராபாத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இதையடுத்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட கவிதா திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இதே விவகாரத்தில் சிபிஐ தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுபானக் கொள்கை தொடர்பான விவகாரத்தில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் தகுதியின் அடிப்படையில் ஜாமீன் கேட்டு எம்.எல்.சி.கவிதா தரப்பில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட மனு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.