மதுபான முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் நிறுத்தி வைப்பு: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை நிறுத்தி வைத்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஜாமீனில் விடுவித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி நியாய் பிந்து நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று பிற்பகல் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர்நீதிமன்ற கோடைக்கால சிறப்பு அமர்வு நீதிபதிகளான சுதீஷ் குமார் ஜெயின் மற்றும் ரவீந்தர் துடேஜா ஆகியோர் அமர்வு நேற்று உடனடியாக விசாரித்தது. விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியில் வர நாள் முழுவதும் இடைக்கால தடை விதிப்பதாக நேற்று காலை வழக்கின் விசாரணை ஆரம்பித்த உடனேயே தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி மற்றும் வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி, “இந்த வழக்கில் அமலாக்கத்துறையை பொறுத்தவரை அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரத்தில் பாரபட்சமான நடவடிக்கையை மட்டுமே காட்டி வருகிறது அவர்களது பதில் எல்லாம் காகிதத்தில் இருக்கிறதே தவிர ஆதாரங்களாக எதுவும் இல்லை. எனவே அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறையால் தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பத்தை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ, ‘‘கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணையின் போது எங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க விசாரணை நீதிமன்றம் போதிய அவகாசம் வழங்கவில்லை.

இது பணமோசடி சட்ட விதி 45க்கு எதிரானதாகும். கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை கொடுத்த ஆவணங்கள் மிகப்பெரியதாக இருக்கிறது என்பதால் அதனை பார்க்கவில்லை என்று விசாரணை கோர்ட் நீதிபதி தெளிவாக தெரிவித்துள்ளார். அப்படி இருக்கும் போது அவரால் எப்படி இந்த வழக்கில் ஜாமீன் வழங்க முடியும் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,‘‘ இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பின்னர் இந்த வழக்கில் விரிவான ஆணை பிறப்பிக்கப்படும். அதுவரை கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை இடைக்காலமாக நிறுத்தி வைக்கிறோம் என உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இதையடுத்து திகார் சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் வெளியில் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related posts

சேலம் மாவட்டம் ஆத்தூரில் ரூ.6 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்!!

மதுரை அருகே முதியவர் கொலை வழக்கில் 5 பேர் கைது!!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீட்டிப்பு: ஜவாஹிருல்லா கண்டனம்