இதை எதிர்த்து லோகநாதன், கடந்த 2017ம் ஆண்டு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எந்தெந்த மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து என்ன விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களை தெரிவிக்குமாறு டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், மூன்றாவது தரப்பின் வர்த்தகம் பாதிக்கப்படும் என்பதால் இச் சட்டப்பிரிவின்படி இந்த தகவல்களை வழங்க முடியாது. இந்த தகவல்கள் விலக்கு பெற்றவை என்று வாதிட்டார்.
இதையடுத்து, தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனம் மட்டுமே மதுபான விற்பனையில் ஈடுபடுகிறது. மதுபானம் கொள்முதல் செய்ய எந்த டெண்டரும் கோரப்படுவதில்லை. நேரடியாக உற்பத்தி நிறுவனங்களில் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்த சூழலில் எப்படி வர்த்தகம் பாதிக்கப்படுகிறது என்று கேட்ட நீதிபதிகள், எந்த அடிப்படையில் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த தகவல்கள் விலக்கு பெற்றவை என்று விளக்கமளிக்குமாறு டாஸ்மாக் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.