தமிழக அமைச்சர்களின் வரிசை அறிவிப்பு; 3வது இடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை, அக்.1: தமிழக அமைச்சர்களின் வரிசை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் உதயநிதி ஸ்டாலின் 3வது இடத்தில் இடம் பெற்றுள்ளார். தமிழக அமைச்சரவை பதவி ஏற்றவுடன் சீனியாரிட்டி மற்றும் தகுதியின் அடிப்படையில் தரவரிசையை, தமிழக அரசு அரசாணையாக வெளியிடும். அதன்படி அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் 10வது இடத்தில் இருந்தார். தற்போது அவர் 3வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார். அவர், பொதுத்துறை, பொது நிர்வாகம், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், டிஆர்ஓக்கள், போலீஸ், உள்துறை, சிறப்பு முயற்சி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன் ஆகிய துறைகளை கவனிப்பார்.

2வது இடம் துரைமுருகனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு, நீர்வளத்துறை, சிறு பாசனம், மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 3வது இடம் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரக கடன்கள், சிறப்பு திட்டங்கள் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

4வது இடம் கே.என்.நேருவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல், 5வது இடம் ஐ.பெரியசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள் உள்ளன. 6வது இடத்தில் பொன்முடி உள்ளார். அவருக்கு வனத்துறையும்,7வதாக எ.வ.வேலுவுக்கு பொதுப்பணிகள் துறை (கட்டிடம்), நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்களும், 8வதாக உள்ள எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு வேளாண்மை, வேளாண்மை பொறியியல், வேளாண் பணிக்கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத்தீர்வை, கரும்பு பயிர்மேம்பாடு, தரிசுநில மேம்பாடு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

9வது இடத்தில் உள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு வருவாய், மாவட்ட வருவாய், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை ஆகியவையும், 10 இடத்தில் உள்ள தங்கம் தென்னரசுவுக்கு நிதித்துறை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம், தொல்லியல்துறை, கூட்டுறவு தணிக்கைத் துறை, புள்ளியல், அரசு ஊழியர்களின் ஓய்வூதியம், ஓய்வூதியச் சலுகைகள் மற்றும் புள்ளிவிவரங்கள், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், முன்னாள் ராணுவத்தினர் நலனும், 11வதாக ரகுபதி உள்ளார். அவருக்கு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை, ஊழல் தடுப்புச் சட்டம் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன.

12வதாக உள்ள முத்துச்சாமிக்கு வீட்டு வசதி, ஊரக வீட்டு வசதி, நகரமைப்புத் திட்டமிடல், வீட்டு வசதி மேம்பாடு, இடவசதி கட்டுப்பாடு, நகரத் திட்டமிடல், நகர் பகுதி வளர்ச்சி, நகர்ப்புற திட்டமிடல் மற்றும் நகர்ப்புற மேம்பாடு ஆகியவையும், 13வது இடத்தில் உள்ள பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறையும், 14வது இடத்தில் உள்ள தா.மோ.அன்பரசனுக்கு ஊரகத் தொழில்கள், குடிசைத் தொழில்கள், சிறுதொழில்கள், குடிசை மாற்று வாரியம் ஆகியவையும், 15வது இடத்தில் உள்ள சாமிநாதனுக்கு செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம், பத்திரிகை, அச்சுக்காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை, அரசு அச்சகம், தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாட்டுத்துறை, தொல்பொருள் ஆகியவையும், 16வது இடத்தில் உள்ள கீதா ஜீவனுக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் உள்ளிட்ட சமூக நலம், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி, இரவலர் காப்பு இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம் ஒதுக்கப்பட்டுள்ளன.

17வது இடத்தில் உள்ள அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மீன்வளம், மீன் வளர்ச்சிக் கழகமும், கால்நடை பராமரிப்பு, 18வது இடத்தில் உள்ள ராஜகண்ணப்பனுக்கு பால்வள மேம்பாட்டுத் துறையும், 19வது இடத்தில் உள்ள ஆர்.ராஜேந்திரனுக்கு சுற்றுலா, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகமும், 20வது இடத்தில் உள்ள சக்கரபாணிக்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடும், 21வதாக வி.செந்தில்பாலாஜிக்கு மின்சாரம், கலால், ஆயத்தீர்வை ஆகிய துறைகளும், 22வது இடத்தில் உள்ள காந்திக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை, பூதானம் மற்றும் கிராமதானமும், 23வது இடத்தில் உள்ள மா.சுப்பிரமணியத்துக்கு மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி, குடும்ப நலன் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

24வது இடத்தில் உள்ள பி.மூர்த்திக்கு வணிகவரி, பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவும், 25வது இடத்தில் உள்ள எஸ்.எஸ்.சிவசங்கருக்கு போக்குவரத்து, நாட்டுடைமையாக்கப்பட்ட போக்குவரத்து, இயக்கூர்தி சட்டமும், 26வது இடத்தில் உள்ள பி.கே.சேகர்பாபுவுக்கு இந்து சமயம், அறநிலையங்கள், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 27வது இடத்தில் உள்ள கோவி.செழியனுக்கு உயர்கல்வி மற்றும் தொழில் நுட்பக்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியலும், 28வது இடத்தில் உள்ள பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையும், 29வது இடத்தில் உள்ள எஸ்.எம். நாசருக்கு சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர்நலன், அகதிகள் வெளியேற்றப்பட்டவர்கள், வக்பு வாரியமும், 30வது இடத்தில் உள்ள அன்பில் மகேஷூக்கு பள்ளிக்கல்வித்துறையும், 31வது இடத்தில் உள்ள சிவ.வீ.மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன், சீர்மரபினர் நலன் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

32வது இடத்தில் உள்ள சி.வி.கணேசனுக்கு தொழிலாளர் நலன், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு ஆகியவையும், 33வது இடத்தில் உள்ள டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறையும், 34வது இடத்தில் உள்ள மதிவேந்தனுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையும், 35வது இடத்தில் உள்ள கயல்விழி செல்வராஜூவுக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை, முன்னாள் ராணுவத்தினர் நலத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.

Related posts

திருப்பதியில் லட்டு கலப்பட விவகாரம்; திண்டுக்கல் ஏஆர் டெய்ரி உரிமையாளர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

பிரதமர் குறித்த கார்கேவின் கருத்து வெறுக்கத்தக்கது: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டனம்

திருவனந்தபுரத்தில் மேலும் 2 பேருக்கு அமீபா காய்ச்சல்