நாமக்கல்: நாமக்கல் அருகே விபத்தில் சிக்கியது போல் நாடகமாடி தொழிலாளியிடம் பணம், செல்போன் பறித்து டூவீலரில் தப்பிய 2பேர் விபத்தில் சிக்கி பலியாகினர். நாமக்கல் கோட்டை தெருவை சேர்ந்தவர் நவீன் (31). இவர், சென்னையை சேர்ந்த நண்பரான மாரி (25) என்பவருடன் நேற்று டூவீலரில் வெளியே சென்றார். அப்போது நாமக்கல் – மோகனூர் சாலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி அருகே நவீன் மற்றும் மாரி இருவரும் டூவீலரில் இருந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது போல் நடித்தனர்.
அந்த வழியாக வந்த தொழிலாளி பொன்னார் (31) என்பவர் இதைப்பார்த்து இருவருக்கும் உதவ சென்றார். அப்போது 2பேரும் பொன்னாரை மிரட்டி அவரிடம் இருந்த செல்போன், பணத்தை பறித்து டூவீலரில் வேகமாக தப்பிச்சென்றனர். இந்நிலையில், சிறிது தூரத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் மாரி படுகாயம் அடைந்து அதேஇடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த நவீன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை நவீன் இறந்தார். இதுகுறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்