அவர் தாக்கல் செய்த மனுவில், சிவகுமாருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும். மகனை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வேலூர் சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு அவரை மாற்ற உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், டிஐஜி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், என்.செந்தில் குமார் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக், இந்த விவகாரத்தில் சிபிசிஐடி எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சீல் வைக்கப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்தார். இதனை படித்துப் பார்த்த நீதிபதிகள், நீதிமன்றம் உத்தரவிட்டதும் உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்காக சிபிசிஐடிக்கு பாராட்டு தெரிவிக்கிறோம்.
இந்த ஒரு வழக்கு மட்டுமின்றி மற்ற விவகாரங்கள் குறித்தும் முழுமையாக சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும். சீர்திருத்தம் செய்யும் இடமாக உள்ள சிறையில் கைதிகள் முறையாக நடத்தப்படவில்லை என்றால் அவர்கள் வெளியில் வந்த பிறகும் குற்றச்செயலில் ஈடுபட வாய்ப்புள்ளது. இந்த வழக்கை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்து, விசாரணையை அக்டோபர் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.