மேலும் சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து உத்தரவு பிறப்பிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வேலுமணி தரப்பு மூத்த வழக்கறிஞர், இவிதான் செயலி மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்ய முடியும். தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேசும் போது நேரடி ஒளிபரப்பு துண்டிக்கப்படுகிறது என்றார். அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், இதுபோன்று கடுமையான குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது என்று ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து தலைமை நீதிபதி, நேரடி ஒளிபரப்பு என்பது சூழலைப் பொறுத்தது. சட்டமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் நேரடி ஒளிபரப்பு செய்வது என்பது சட்டப்படி கட்டாயம் இல்லை என்று தெரிவித்து, எதிர்க்கட்சியினருக்கு பாரபட்சம் காட்டப்படுவதை நிரூபிப்பது குறித்து வேலுமணி தரப்பு வழக்கறிஞரிடம் விளக்கம் கேட்டார். இது குறித்து விளக்கம் அளிக்க அவர் அவகாசம் கோரியதையடுத்து விசாரணையை நீதிபதிகள் ஜனவரி 23ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.