சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தையும் நேரடி ஒளிபரப்பு செய்வது சட்டப்படி கட்டாயம் அல்ல: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யக்கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த், சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் கடந்த 2015ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இதில் தன்னையும் இணைக்க கோரி அதிமுக சட்டமன்ற கொறடா எஸ்.பி. வேலுமணியும் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வேலுமணி தரப்பில், அரசியல் சட்டப் பிரிவுகளை மேற்கோள்காட்டி சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பிக்க எந்த தடையும் இல்லை என்று வாதிடப்பட்டது. ஆனால், தலைமை நீதிபதி சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப முடியாது என்றும் உயர்நீதிமன்றம் அனுப்பும் நோட்டீஸ் அவரை கட்டுப்படுத்தாது என்றும் தெரிவித்தார்.

மேலும் சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து உத்தரவு பிறப்பிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வேலுமணி தரப்பு மூத்த வழக்கறிஞர், இவிதான் செயலி மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்ய முடியும். தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேசும் போது நேரடி ஒளிபரப்பு துண்டிக்கப்படுகிறது என்றார். அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், இதுபோன்று கடுமையான குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது என்று ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து தலைமை நீதிபதி, நேரடி ஒளிபரப்பு என்பது சூழலைப் பொறுத்தது. சட்டமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் நேரடி ஒளிபரப்பு செய்வது என்பது சட்டப்படி கட்டாயம் இல்லை என்று தெரிவித்து, எதிர்க்கட்சியினருக்கு பாரபட்சம் காட்டப்படுவதை நிரூபிப்பது குறித்து வேலுமணி தரப்பு வழக்கறிஞரிடம் விளக்கம் கேட்டார். இது குறித்து விளக்கம் அளிக்க அவர் அவகாசம் கோரியதையடுத்து விசாரணையை நீதிபதிகள் ஜனவரி 23ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Related posts

தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்

கனமழை எச்சரிக்கை காரணமாக பெங்களூருவில் நாளை(அக்.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சாணார்பட்டி அருகே திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு: கயிறு கட்டி கடக்கும் கிராம மக்கள், சிறுவர்கள்