இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பதிலில், ‘எந்தவொரு மாநிலம் நல்லது செய்தால், அதனை முன்மாதிரியாக கொண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு செயல்படுத்தும். ஆனால் எந்த மாநிலமும் மேற்குவங்க மாநிலத்தை முன்மாதிரியாக ஏற்றுக்கொள்ள விரும்பாது’ என்றார். அப்போது திரிணாமுல் எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பேசுகையில், ‘கடந்த பத்து ஆண்டுகளில் இடதுசாரி தீவிரவாத சம்பவங்கள் 53 சதவீதம் குறைந்துள்ளது. இந்த சம்பவங்களில் பாதுகாப்பு படையினரின் இறப்பு எண்ணிக்கையில் 72 சதவீதம் குறைந்துள்ளது. இடதுசாரி தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு நாட்டின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் ஆயுதங்கள் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கிறார்கள். 2010ம் ஆண்டில் 96 மாவட்டங்கள் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தன. ஒன்றிய அரசின் தீவிர முயற்சியால் 2023ல் இடதுசாரி தீவிரவாதம் 42 மாவட்டங்களாகக் குறைக்கப்பட்டன. வரும் நாட்களில் இடதுசாரி தீவிரவாதிகள் ஒழிக்கப்படுவார்கள்’ என்றார்.