Sunday, June 30, 2024
Home » இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆசையை நிராசை ஆக்கிய மாஜி அமைச்சரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆசையை நிராசை ஆக்கிய மாஜி அமைச்சரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Karthik Yash

‘‘குக்கர் கட்சி நிர்வாகி மீது உச்சகட்ட டென்ஷனில் இருக்கும் இலை கட்சியின் மாஜி அமைச்சர் யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தாமரையுடன் ஏற்பட்ட பனிப்போரால் அதனுடன் கூட்டணியை முறித்து கொண்டார் சேலம்காரர். இந்த முறிவுக்கு பின்னர் டெல்டா மாவட்டத்தில் அரசியல் காட்சிகள் மாறிவிட்டதாம். அதாவது, குக்கர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தாமரைக்கு ஆதரவாக செயல்பட்டு வர்றாங்க. ஒன்றிய அரசுக்கு எதிராகவோ அல்லது தாமரை தலைவர்களுக்கு எதிராகவோ பேசுவதை நிறுத்திட்டாங்களாம். தாமரை நிர்வாகிகளுடன் கொஞ்ச கொஞ்சமாக நெருங்கி வர்றாங்களாம். கடலோர மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு குக்கர் கட்சியின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், குக்கர் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் கலந்து கொண்டாராம். இதில் கூட்டம் ஆரம்பம் முதல் கடைசி வரையிலும் ஒன்றிய அரசுக்கு ஆதரவாகவும், சேலத்துக்காரர் அணியில் உள்ள மாஜி அமைச்சருக்கு எதிராகவும் பேசினாராம். தாமரை- இலைகட்சி இடையே விரிசல் ஏற்படுவதற்கு முன்னதாக நிம்மதியாக தூங்கிய மணியானவர் விரிசல் ஏற்பட்டதும் ரெய்டுக்கு பயந்து தூக்கத்தை மறந்து தவித்து வருகிறாராம். குக்கர் கட்சியினர், தாமரை நிர்வாகிகளுடன் நெருங்கி வருவது மணியானவருக்கு ஏற்கனவே பீதியை கிளப்பி உள்ளதாம். இதில் வேற குக்கர் கட்சி சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூட மணியானவருக்கு எதிராக முக்கிய நிர்வாகி பேசியதால் மணியானவர் அவர் மீது உச்ச கட்ட கோபத்தில் இருந்து வருகிறார் என இலைகட்சி தொண்டர்கள் மத்தியில் பேச்சு பலமாக ஓடுது…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சேலம் விமான நிலையத்துக்கு இலை கட்சியின் தலைவரின் பெயரை வைக்க மல்லு கட்டும் இலை கட்சிகாரர் யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைகட்சியின் புதிய பொதுச்செயலாளரான சேலத்துக்காரரை மகிழ்விக்கும் முயற்சிகளில், மூத்த நிர்வாகிகளை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடுகிறாராம், அந்த கட்சி சார்பில் விவாதங்களில் பங்கேற்கும் ஒருத்தரு. உண்மையில் இவரு, தாமரை கட்சியின் தீவிர விசுவாசியாம். மம்மி காலத்தில் அவரது தீவிர ஆதரவாளர் போல பிட்டை போட்டு, எப்படியோ கிளிக் ஆகி ஊராட்சிக்குழு கவுன்சிலராகவும் இருந்திருக்காரு. மாங்கனி மாவட்டத்தின் ஏர்போர்ட், கொஞ்ச நாளாக பிளைட் சர்வீஸ் இல்லாமல் முடங்கி கிடந்துச்சு. இப்போதுள்ள கவர்மென்ட் மற்றும் எம்பியின் முயற்சியால், மீண்டும் பிளைட் சேவை ஆரம்பிச்சிருக்கு. ஏற்கனவே இந்த ஏர்போர்ட் வருவதற்கு யார் முக்கிய காரணம் என்பதும், உள்ளூர் மக்களுக்கு நன்றாகவே தெரியும். இப்படிப்பட்ட நிலையில், ஏர்போர்ட்டுக்கு சேலத்துக்காரர் பெயரை வைக்க வேண்டும் என்று சொல்லி யூனியன் மினிஸ்டருக்கு லெட்டர் எழுதியிருக்காராம்… இதெல்லாம் டூமச் என்று அவங்க கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அணி தாவும் முயற்சியில் தேனிக்காரங்க ஏன் ஈடுபட்டிருக்காங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தமிழ்நாட்டுல வர்ற எம்பி எலக்‌ஷன்ல தாமரையோட, இலை கூட்டணி முறிஞ்சுபோச்சு. இதனால எந்த உதிரி கட்சியுடன் கூட்டணி வைப்பது என்று தெரியாம சேலம்காரர் அணி தவிச்சு வர்றாங்க. இது ஒருபுறம் இருக்க தாமரைய இலை கைவிட்டதா.. இலைய தாமரை கைவிட்டதா என்பது ஊருக்கே தெரியும். இந்த நேரத்துல குக்கரோட, கைகோர்த்துகிட்டு, தேனி அணியினர் தாமரை பக்கம் தாவலாம்னு ரெடியாகிட்டாங்க. ஆனா இவங்களை, சிவப்பு கம்பளம் விரிச்சு வரவேற்க தாமரை தயாராக இல்லையாம். இதனால் குக்கர் கட்சி தலைவரும், தேனி அணியினரும் அப்செட்டில் இருக்கிறாங்களாம். இவங்களை நம்பி வந்த கட்சி நிர்வாகிங்க, நாம் எந்த பக்கத்துல இருக்கிறோம். நம்மை யாரும் கண்டுக்கொள்ளவில்லையேன்னு பீல் பண்றாங்களாம். அதோட தேனிக்காரர் தனியாக எலக்‌ஷன்ல போட்டி போடமாட்டார். குக்கர் சின்னத்தில் நிற்க வைத்தாலும் நின்னுடுவார். அதுக்குள்ள நாம் வேறு எங்காவது தாவிடணும்னு வெயிலூர், குயின்பேட்டை, மிஸ்டர் பத்தூர் நிர்வாகிங்க தயாராகிட்டு வர்றாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயங்கும் கட்சியினர் யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் பணிகளை பல கட்சிகள் துவக்கியுள்ளது. இதுல, ‘புரம்’ என்று முடியும் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி ஒன்றியம்தோறும் சென்று இலை கட்சியின் மாஜி அமைச்சர் ‘சூரியபேஸ்’ பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் கூட்டங்களை நடத்தி வருகிறாராம். சமீப நாட்களாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியினரிடையே போதிய எழுச்சி இல்லாத நிலை, செல்லும் இடத்தில் கட்சியினர் வரவேற்பு அளிக்காத சூழல் நிலவி வருகிறதாம். இதனால, இலை கட்சியில் இருந்து எம்பி தேர்தலில் போட்டியிட விரும்பியவர்கள் தற்போது பின்வாங்க தொடங்கிட்டாங்க. கூட்டணியில் குழப்பம், கட்சி தலைமையில் கருத்து வேறுபாடு உள்ளிட்டவைகளால் மக்களவைத் தேர்தலில் புரம் தொகுதியில் அக்கட்சியினர் பின்வாங்கி இருக்கிறார்களாம். சமீபத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய மாஜி அமைச்சர் ‘சூரியபேஸ்’, எங்களுக்கு மக்களவைத் தேர்தல் முக்கியமில்லை, 2026 சட்டமன்ற தேர்தல் தான் குறிக்கோள் என்று வீரமுழுக்கமிட்டதால் தேர்தலில் சீட்டு கேட்கும் எண்ணத்தை கைவிட்டுட்டாங்களாம். இதற்கு காரணமே, மாஜி அமைச்சர் கட்சியினருக்கு கொடுத்த ராங் மெசேஜ் தானாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அல்வா மாவட்டத்து தாமரை மேட்டர் ஒன்றை சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சி கூட்டணி இருந்த வரை தாமரை கட்சியின் அல்வா ஊரின் எம்எல்ஏ டெல்லி கனவில் மிதந்தாராம். அதாவது கடந்த சட்டசபை தேர்தலில் இலை கட்சி கூட்டணியுடன் சவாரி செய்து எம்எல்ஏ ஆனது போல், இந்த முறை அல்வா தொகுதியில் நின்று தலைநகர் செல்ல வேண்டும் என மனக் கோட்டை கட்டினாராம். அல்வா தொகுதியில் நின்று வென்றால் எப்படியும் தமிழ்நாடு கோட்டாவில் விஐபி ஆகி விடலாம். இந்தியா முழுவதும் வலம் வரலாம் என்ற கனவில் இருந்தாராம். ஆனால் தற்போது இலை கட்சி கூட்டணி ‘டமால்’ ஆனதால், எம்எல்ஏவின் கணக்கு தப்பு கணக்காகி விட்டதாம். மக்களவை தேர்தலை மனதில் கொண்டு முன்பு பொது நிகழ்ச்சிகளில் அதிகம் தலை காட்டிய அந்த எம்எல்ஏவை, கூட்டணி முறிந்த பிறகு அதிகம் காண முடியவில்லையாம். முன்பு மக்களவை தேர்தலை மனதில் வைத்து ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் எவ்வளவு ஓட்டு கிடைக்கும் என்றெல்லாம் கணக்கு போட்டு பார்த்த அந்த எம்எல்ஏ கடந்த சில நாட்களாக வெளிநாட்டிற்கு சென்று கப்சிப் என இருக்கிறாராம். இலை கட்சியில் இருந்தவரை விஐபி அந்தஸ்தில் இருந்தோம். மீண்டும் அந்த விஐபி அந்தஸ்தை எட்டி விடலாம் என நினைத்தால் தேசிய கட்சியில் இருக்கும் தமக்கு அந்த எண்ணம் ஈடேறாமல் போகிறதே என்ற கவலையாம்…’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

13 − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi