Saturday, July 6, 2024
Home » எதிர்க்கட்சி தலைவரை பேச அனுமதிக்காததை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் வெளிநடப்பு: மாநிலங்களவையில் பொய்யான தகவலை பிரதமர் மோடி தெரிவித்ததாக கண்டனம்

எதிர்க்கட்சி தலைவரை பேச அனுமதிக்காததை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் வெளிநடப்பு: மாநிலங்களவையில் பொய்யான தகவலை பிரதமர் மோடி தெரிவித்ததாக கண்டனம்

by Karthik Yash

புதுடெல்லி: மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை பேச அனுமதிக்காததை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். மேலும் பிரதமர் மோடி அவையில் தவறான தகவல்களை தெரிவித்ததாக கண்டனமும் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து மக்களவையில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் பேசினார். அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தார். அதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் மோடி நேற்று விவாதத்துக்கு பதிலளித்து பேசினார். இதில் பிரதமர் மோடி, அரசியலமைப்பு விவகாரம் தொடர்பாக காங்கிரசுக்கு எதிராக தவறான தகவல்களை வெளியிட்டதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

மக்களவை தேர்தல் பிரசாரத்தில் இருந்தே அரசியலமைப்பு தொடர்பாக பாஜ, காங்கிரஸ் இடையே கடுமையான வார்த்தை மோதல்கள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் மாநிலங்களவையில் நேற்று அரசியலமைப்பு குறித்து பிரதமர் மோடி பேசுகையில் அவரது தவறை சுட்டிக் காட்ட எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பலமுறை அனுமதி கேட்டார். பலமுறை அவர் எழுந்து நின்று அனுமதி கேட்டும் அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதிக்கவில்லை. இதனால், பிரதமர் மோடி பேசிக் கொண்டிருக்கும் போதே பாதியிலேயே இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் அவரது பேச்சை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததால் அவையில் பரபரப்பு நிலவியது. பொய்யான தகவல்கள் மூலம் மோடி அவையை தவறாக வழிநடத்துவதாக கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதில் பிரதமர் மோடி பேசியதாவது: அரசியலமைப்பு சட்டத்தை பாஜ மாற்றிவிடும் என தேர்தல் பிரசாரத்தில் இருந்து காங்கிரஸ் திரும்பத் திரும்ப கூறி வருகிறது. இனியும் இந்த பொய்யான கட்டுக்கதையை தொடரப் போகிறீர்களா? நான் அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். 1977ல் நடந்த தேர்தலை மறந்து விட்டீர்களா? அப்போது, செய்தித்தாள்கள் மற்றும் வானொலிகள் முடக்கப்பட்டிருந்தன. பேச்சு சுதந்திரம் இல்லை. அந்த சமயததில் அரசியலமைப்பை மீண்டும் நிறுவ வேண்டும், அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டுமென்ற ஒற்றை விஷயத்திற்காக மக்கள் வாக்களித்தனர். 1977ம் ஆண்டு நடந்த தேர்தலை விட வேதனை தரும் தேர்தல் உலகில் வேறெதுவும் இல்லை.

அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மக்களின் இதயங்களில் எப்படி இருந்தது என்பதை 1977 தேர்தல் தெளிவாகக் காட்டுகிறது. நீங்கள் இப்போது மக்களை தவறாக வழிநடத்துகிறீர்களா? அந்த நேரத்தில் மக்கள் இந்திரா காந்தியை அதிகாரத்திலிருந்து தூக்கி எறிந்தனர். தற்போது அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதில் மக்கள் எங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால் தான் 2024 மக்களவை தேர்தலில் எங்களுக்கு வெற்றியை தந்துள்ளனர். எமர்ஜென்சி காலத்தில் மக்களவை பதவிக் காலம் 7 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது.

தேசிய ஆலோசனைக் குழு உருவாக்கியது உள்ளிட்ட பல அரசியலமைப்பு முறைகேடுகளை காங்கிரஸ் செய்தது. இந்த நடவடிக்கைகள், அரசியலமைப்பு மற்றும் அதன் நெறிமுறைகளை விட ஒரு குடும்பத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்காக செய்யப்பட்டவை. நாங்கள் அரசியலமைப்பை வெறும் ஆவணங்களின் தொகுப்பாக மட்டும் பார்க்கவில்லை. அதன் உணர்வும் வார்த்தைகளும் மிகவும் முக்கியம் என கருதுகிறோம். அரசியலமைப்பு கலங்கரை விளக்கம் போன்றது. அது இந்த அரசின் திசையை காட்டுகிறது. மக்கள் ஆதரவு இல்லாத காங்கிரஸ், நாட்டை தவறாக வழிநடத்த பொய் கதைகள் மற்றும் போலி வீடியோக்களை நாடுகிறது.

வளர்ச்சி பற்றிய விவாதங்களில் ஈடுபடாமல், ஊழலைக் காப்பாற்றும் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்துகின்றன. உண்மையை எதிர்கொள்ளவும், அவர்கள் எழுப்பிய பிரச்னைகளுக்கு பதில்களைக் கேட்கவும் தைரியம் இல்லாமல் வெளிநடப்பு செய்துள்ளனர். இதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. பொய்களைப் பரப்புபவர்களுக்கு உண்மையைக் கேட்கும் தைரியம் இல்லை. அவர்கள் மாநிலங்களவையின் மரபை அவமதிக்கின்றனர். மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றி எந்த எதிர்க்கட்சியும் கேள்வி கேட்கவில்லை.

இதுபோன்ற பிரச்னைகள் தங்கள் சொந்த கட்சி அல்லது கூட்டணி ஆளும் மாநிலங்களில் நடந்தால் அதை அரசியலாக்காமல் அமைதியாக இருப்பது எதிர்க்கட்சி கூட்டணியின் கொள்கையாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் நலன்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக தலைவர்களை பலிகடாவாக்க காங்கிரஸ் தொடர்ந்து பயன்படுத்துகிறது. சமீபத்திய சபாநாயகர் தேர்தல், 2022 மற்றும் 2017 ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்கள் ஆகியவற்றில் தோற்போம் என்று உறுதியாக தெரிகின்ற தேர்தலில் திட்டமிட்டு தலித் வேட்பாளர்களை காங்கிரஸ் களமிறக்குகிறது.

140 கோடி மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆணையை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. நான் இங்கு விவாதத்தால் ஜெயிக்க வரவில்லை. இந்த நாட்டின் சேவகன் நான். எங்களின் பணிகளைப் பற்றி விரிவாகக் கூறுவதற்காக இங்கு வந்துள்ளேன். அதுவே எனது கடமை. இந்த அரசு ஒருபோதும் ஊழலை சகித்துக் கொள்ளாது. ஊழல், கருப்பு பணத்திற்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஊழல்வாதிகளுக்கு எதிரான வலுவான நடவடிக்கை எடுக்க புலனாய்வு அமைப்புகளுக்கு அரசு முழு சுதந்திரம் அளித்துள்ளது. எனவே ஊழல் செய்த யாரும் தப்ப மாட்டார்கள்.

புலனாய்வு அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறுகிறார்கள். மதுவில் ஊழல், குழந்தைகளுக்கான வகுப்பறைகள் கட்டுவதில் ஊழல், தண்ணீரில் ஊழல் என பல ஊழல்களை ஆம் ஆத்மி செய்வதாக காங்கிரஸ் புகார் கூறியிருக்கிறது. இதுதொடர்பாக பல ஆதாரங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இன்று இரு கட்சிகளும் கூட்டணி அமைத்ததும், ஆம் ஆத்மி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவர்கள் மோடியை துஷ்பிரயோகம் செய்கிறார்கள். ஆம் ஆத்மிக்கு எதிராக அளித்த ஆதாரங்கள் உண்மையா பொய்யா என்பதற்கு காங்கிரஸ் இப்போது பதில் சொல்ல வேண்டும். எனவே, ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எங்களின் கடமை. இதனால் எங்களுக்கு தேர்தலில் வெற்றி தோல்வி என்பது முக்கியமல்ல. காஷ்மீரில் தீவிரவாதத்திற்கு எதிரான எங்களின் போராட்டம் கடைசி கட்டத்தில் உள்ளது. அதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். இவ்வாறு பிரதமர் மோடி தனது 2 மணி நேர உரையில் குறிப்பிட்டார்.

* காலவரையின்றி ஒத்திவைப்பு
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்து முடித்ததும், தீர்மானத்தை அவை ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கனவே நேற்று முன்தினம் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* மணிப்பூர் உங்களை ஒருநாள் நிராகரிக்கும்
மணிப்பூர் கலவரம் குறித்து மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி, ‘‘மணிப்பூரில் இயல்புநிலையை கொண்டு வர அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இப்போது அங்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. இது மணிப்பூரில் அமைதியை மீட்பதற்கான சாத்தியம் இருப்பதை காட்டுகிறது. அங்கு பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படுகின்றன. இந்த விஷயத்தில் நாம் அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு நிலைமையை சீராக்க ஒத்துழைக்க வேண்டும். அது நமது பொறுப்பு. அதைவிட்டு, மணிப்பூரில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயல்களை செய்பவர்களை எச்சரிக்க விரும்புகிறேன். இது போன்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். அத்தகையவர்களை மணிப்பூரே நிராகரிக்கும் காலம் வரும்’’ என்றார்.

* ஆபத்தான முன்மாதிரி
மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் கூறுகையில், ‘‘மூத்த உறுப்பினர்களே பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வது கவலை அளிக்கிறது. பிரதமர் மோடியின் பதிலின் போது வெளிநடப்பு செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்திற்கு எதிரான ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்கி உள்ளனர்’’ என்றார்.

You may also like

Leave a Comment

eleven − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi