தண்டையார்பேட்டை: தமிழ்நாடு சலவை தொழிலாளர்கள் பேரவை சார்பில் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று நடந்தது. மாநில தலைவர் சேலம் பாலு தலைமை வகித்தார். பொது செயலாளர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். இதில் சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட தமிழக முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்ட சலவை தொழிலாளர்கள் கலந்து கொண்டு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில், வீட்டு வசதி வாரியத்தில் 5 சதவீதம் தங்களுக்கு வீடு ஒதுக்குவது போல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் கட்டப்படும் கடைகளில் மானிய வாடகையில் 5 சதவீதம் ஒதுக்க வேண்டும். மாநில முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் துணி சலவை செய்வதற்கு தங்களை தேர்வு செய்ய வேண்டும். சலவை தொழிலாளர்களுக்கு நவீன கருவிகளுடன் டோபி கானா அமைத்து தர வேண்டும். நத்தம் புறம்போக்கு பகுதியில் வசிக்கும் சலவை தொழிலாளர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.