லட்டு செய்வதற்கு கலப்பட நெய் சப்ளை செய்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது போலீஸ் விசாரணை துவக்கம்

திருமலை: திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் வினியோகம் செய்த திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பதி கிழக்குப் காவல் நிலையத்தில் திருப்பதி தேவஸ்தானத்தின் கொள்முதல் பிரிவு பொது மேலாளர் முரளிகிருஷ்ணா நேற்று புகார் அளித்தார். இந்த புகாரில்,‘‘ இந்த ஆண்டு மே மாதம் 15ம் தேதி 10 லட்சம் கிலோ நெய் சப்ளை செய்ய ஆர்டர் பெற்ற ஏ.ஆர். நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 12, 20, 25 மற்றும் ஜூலை மாதம் 6 மற்றும் 12ம் தேதிகளில் 5 டேங்கர்களில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் சப்ளை செய்தது.

இந்த நெய் கொண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தயாரிக்கப்படும் லட்டு பிரசாதம் தயார் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த நிறுவனம் தரம் குறித்து தேவஸ்தானத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில் ஜூலை மாதம் 6 மற்றும் 12ம் தேதிகளில் ஏ.ஆர். டெய்ரி சப்ளை செய்த நெய்யை திருப்பதி தேவஸ்தானம் தேசிய பால் வள வாரியத்தின் ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தோம். அந்த ஆய்வகம் நடத்திய பரிசோதனையில் நெய்யில் தாவர எண்ணெய் மற்றும் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு திருப்பதி தேவஸ்தானம் நோட்டீஸ் அனுப்பியது. நெய்யில் கலப்படம் செய்யப்படவில்லை என ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் செப்டம்பர் மாதம் 4ம் தேதி பதில் அளித்தது. எனவே விதிமுறைகளுக்கு மாறாக திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் சப்ளை செய்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி கிழக்குப் போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து தரமற்ற நெய் வழங்கப்படுவதாக திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் தங்கள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Related posts

மம்சாபுரம் காந்தி நகர் பகுதியில் மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

நெல்லையில் ரூ.1260 கோடி முதலீடு செய்கிறது விக்ரம் சோலார்!