Tuesday, September 24, 2024
Home » மறைந்த சீதாராம் யெச்சூரியின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி சமதர்ம இந்தியாவை உருவாக்க பணியாற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மறைந்த சீதாராம் யெச்சூரியின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி சமதர்ம இந்தியாவை உருவாக்க பணியாற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

by Karthik Yash

சென்னை: மதச்சார்பற்ற, சகோதரத்துவ, சமூகநீதி இதை எல்லாவற்றையும் உள்ளடக்கிய சமதர்ம இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதற்காக நாம் அனைவரும் அவர் வழியிலே நின்று பணியாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற சீதாராம் யெச்சூரி படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசியதாவது: சீதாராம் யெச்சூரி மறைவு, என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. அவருடைய உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோதே, நான் அமெரிக்காவில் இருந்து தொடர்பு கொண்டு தொடர்ந்து அவரைப்பற்றி விசாரித்துக் கொண்டே இருந்தேன். எப்படியாவது உடல் நலம் பெற்று அவர் திரும்பி விடுவார் என்றுதான் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால், நம் எல்லோரையும் வருத்தமடைய செய்யும் வகையில், அவர் நம்மை எல்லாம் விட்டு பிரிந்து விட்டார் என்ற சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

யெச்சூரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் சொந்தமல்ல! எங்களுக்கும் சொந்தம். அனைவருக்கும் சொந்தம். எல்லோருக்கும் சொந்தமானவராக அவர் விளங்கினார். வாழ்ந்தார், வாழ்ந்து காட்டியிருக்கிறார். எடுத்துக்காட்டியிருக்கிறார். வழிகாட்டியிருக்கிறார். இந்தியாவின் கருத்தியல் அடையாளங்களில் ஒருவராக இருக்கிறார் என்றால் நிச்சயமாக நாம் அவரைத்தான் குறிப்பிடவேண்டும். அவரின் இழப்பு என்பது ஒரு கருத்தியலுக்கான இழப்பாக அமைந்துவிட்டது. இந்த நேரத்தில், சீதாராம் யெச்சூரியைப் பற்றி நான் சொல்லவேண்டும் என்று சொன்னால், கோவையில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது.

அந்த மாநாடுதான் இப்போது என்னுடைய நினைவுக்கு வருகிறது. தலைவர் கலைஞர் நடத்திய அந்த செம்மொழி மாநாட்டில், யெச்சூரி பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார். “தமிழ்நாட்டில் எனக்கு ஒரு பங்குண்டு” என்று யெச்சூரி ஆற்றிய உரைதான் என்னுடைய நினைவிற்கு வருகிறது.பாலகிருஷ்ணன் தெரிவித்தது போல, 2015-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி தேர்ந்தெடுக்கப்பட்டார். “நம்முன் உள்ள முக்கிய பணி, இடதுசாரிகளையும், ஜனநாயகச் சக்திகளையும் ஒருங்கிணைப்பதுதான் என்று பேசினார். இந்தியாவின் எத்தனையோ பல பிரபலமான அரசியல் தலைவர்களை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உருவாக்கியிருக்கிறது. அப்படி உருவாக்கி இருக்கக்கூடிய தலைவர்களுள் முக்கியமான தலைவர்தான் யெச்சூரி, ஜே.என்.யு. முழுவதையும் இடதுசாரி கோட்டையாக மாற்றிய பெருமை யெச்சூரிக்குத்தான் உண்டு. அதனால்தான் அவரது உடல் ஜே.என்.யுவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இது அவரின் அறிவாற்றலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

தேவகவுடா, குஜ்ரால் ஆகியோர் பிரதமர்களாக பதவி வகித்த காலத்தில் இடது சாரிகளின் பங்களிப்புக்குப் பின்னணியில் இருந்து பெரும் பங்காற்றியவர். 1996-க்கு பிறகு ஒன்றியத்தில் கூட்டணி அரசுகள் உருவான காலத்தில், கூட்டணி அரசுகளை அமைப்பதில் இடதுசாரிகள் மிக மிக முக்கியப் பங்கு வகித்தார்கள். ஜனதா தளத்தின் தேவகவுடா பிரதமரான போதும், அதன்பிறகு ஐ.கே.குஜ்ரால் பிரதமரான போதும் தி.மு.க. பங்கேற்ற ஐக்கிய முன்னணிக்கு இடதுசாரிகள் ஆதரவு அளித்தார்கள். அப்போது ஹர்கிஷன்சிங் சுர்ஜித்தின் ‘படைத் தளபதியாக’ செயல்பட்டவர். அன்றைக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகளில் சீதாராம் யெச்சூரியும் கலந்து கொண்டு தன்னுடைய ஆழமான கருத்துக்களை எல்லாம் பதிவு செய்திருக்கிறார். ஐக்கிய முன்னணி ஆட்சியின் போது, குறைந்த பட்ச செயல் திட்டத்தை உருவாக்கியதில் முக்கியமான காரணகர்த்தாவாக விளங்கியவர்.

இப்போது நாம் உருவாக்கியிருக்கும் இந்தியா கூட்டணிக்கு முக்கிய காரணகர்த்தாக்களில் ஒருவராக விளங்கியவர் யெச்சூரி. சில கட்சிகளோடு முரண்பாடு இருக்கலாம். ஆனால், முரண்பாடுகள் இருந்தாலும் அதையும் தாண்டி அகில இந்திய அளவில் பா.ஜ.வை வீழ்த்த எல்லோரும் கைகோத்தாக வேண்டும் என்ற உறுதியோடு இருந்து அந்த பணியை வெற்றிகரமாக நடத்தி காட்டினார். இந்தியா கூட்டணி இந்தளவுக்கு வெற்றி பெற முக்கியமான காரணகர்த்தாவாக இருந்தார். சீதாராம் யெச்சூரி சிறந்த எழுத்தாளராகவும் விளங்கியிருக்கிறார். சீதாராம் யெச்சூரி விட்டுச்சென்றுள்ள பணிகளை எல்லாம் நாம் எல்லோரும் தொடர்ந்து தொய்வில்லாமல் தொடர வேண்டும்.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கி 100 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில், அதன் ஆளுமைகளாக வலம் வந்த தலைவர்களின் வரிசையில், தனக்கென தனி இடம் பெற்று புகழ் மிக்க தலைவராக வாழ்ந்து காட்டியிருக்கிறார். கல்வியையும், அதன் மூலம் பயின்ற அரசியலையும் சமூக மாற்றத்துக்காக பயன் படுத்தியவர். மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும், சகோதரத்துவ இந்தியாவை உருவாக்க வேண்டும், சமூக நீதி இந்தியாவை உருவாக்க வேண்டும். இதை எல்லாவற்றையும் உள்ளடக்கிய சமதர்ம இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதற்காக நாம் அனைவரும் அவர் வழியிலே நின்று பணியாற்ற வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

* யெச்சூரி பேசியதை இப்போதும் மறக்க முடியாது
கலைஞர் மறைவிற்கு பிறகு திமுக சார்பில், இரங்கற்கூட்ட நிகழ்ச்சிகளை ஒவ்வொரு மாவட்டமாக நடத்தினோம். அதில் ஒன்று திமுக நடத்திய ”தெற்கில் உதித்தெழுந்த சூரியன்” புகழஞ்சலிக் கூட்டம் ஒன்று. அந்த நிகழ்ச்சியின்போது சீதாராம் யெச்சூரி பங்கேற்று கலைஞர் பற்றி புகழ்ந்து பேசினார். யெச்சூரி பேசுகிறபோது குறிப்பிட்டார். சென்னையில் பிறந்த அவருக்கு தமிழ் பேசத் தெரியும் என்றாலும், மற்ற மாநிலங்களில் வந்திருக்கக்கூடிய தலைவர்களுக்கு புரியாது என்று ஆங்கிலத்தில் முழுமையாக பேசினார். தமிழ்நாடு இல்லாமல் இந்தியா இல்லை, கலைஞர் இல்லாமல் தமிழ்நாடு இல்லை என்று பேசினார்.

அதைத் தொடர்ந்து பேசும்போது அவரின் தமிழ் மட்டும் பிரபலம் அல்ல, அவரின் நகைச்சுவை உணர்வும் ரசிக்கத்தக்கது. மாக்சிம் கார்க்கியின் தாய் காவியத்தின் மூலம் மக்களுக்கு தொடர்ந்து முற்போக்குச் சிந்தனைகளை விதைத்தவர் கலைஞர்” என்று அந்த புகழஞ்சலிக் கூட்டத்தில் சீதாராம் யெச்சூரி உணர்வு பூர்வமாக பேசியதை என்னால் இப்போதும் நிச்சயமாக என்னால் மறக்க முடியாது. அந்தளவுக்கு கலைஞர் மீது அன்பு கொண்டவர், பாசம் கொண்டவர். என் மீது கூட அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தார். கூட்டணிப்பற்றி பேசிக் கொண்டிருந்தபோது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தலைவர்கள் முரண்பிடித்தாலும் அவர்தான் சரி செய்து சிரித்த முகத்துடன் முடித்துக் கொடுப்பார். அது எல்லாம் பசுமையாக நினைவிற்கு வருகிறது. அவருடைய புன்சிரிப்பையும் நம்மால் என்றைக்கும் மறக்க முடியாது. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சிரித்த முகத்தோடுதான் பேசுவார். எந்தக் கருத்தையும் சொல்வதாக இருந்தாலும் அதையும் சிரித்த முகத்தோடுதான் சொல்வார் என்று முதல்வர் பேசும்போது குறிப்பிட்டார்.

You may also like

Leave a Comment

nineteen − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi