தமிழக சட்டசபையில் நேற்று மாலையில் கூட்டுறவு, உணவுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் தி.மு.க. உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (விருதுநகர்) பேசும்போது, தமிழ்நாடு அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தால் முதியோர்கள் பயன் அடைந்து வருகின்றனர். அதுபோன்று முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த ஆட்சியில் கூட்டுறவு சங்கத் தேர்தல் முறையாக நடைபெறவில்லை. தற்போது எதிரணியில் இருப்பவர்களும் பாராட்டும் வகையில் முறைகேடான உறுப்பினர்களை நீக்கிவிட்டு கூட்டுறவு சங்க தேர்தலை முதலமைச்சர் நடத்தி தருவார் என்று நம்புகிறேன்” என்று கோரிக்கை விடுத்தார்.