பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மூடா நில முறைகேடு வழக்கு ஆதாரங்களை அழிப்பதாகவும், அதனால் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அமலாக்கத்துறையிடம் சமூக ஆர்வலர் புகார் கொடுத்துள்ளார். அமலாக்கத்துறைக்கு பிரதீப் குமார் எழுதிய கடிதத்தில், ‘மூடா நில முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லையெனில், மொத்த ஆதாரங்களும் அழிக்கப்படலாம். முதல்வர் சித்தராமையா ஆதாரங்களை அழிக்கிறார். சித்தராமையாவின் மனைவி பார்வதி மூடா ஒதுக்கிய 14 மனையிடங்களையும் திருப்பி ஒப்படைப்பதாக கூறியதை மூடா ஏற்றுக்கொண்டு அந்த நிலங்களை திரும்பப்பெற்றது. விசாரணை நடந்துவரும் நிலையில், அந்த நிலத்தை மூடா ஆணையர் திரும்பப்பெற்று அந்த ரெக்கார்டுகளை மாற்றியிருக்கிறார். விசாரணையில் மிக மோசமாக தலையீடு நடந்திருக்கிறது. ஆதாரங்களை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராக விசாரணையை முன்னெடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.