சென்னை: ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் ஒரு மாதத்துக்கு மேலாக தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரூ.100 கோடி மதிப்பிளான 22 ஏக்கர் நிலத்தை அபகரிப்பு செய்த வழக்கில் தொடர்ந்து 30 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக உள்ளார். இதனை அடுத்து அவர் மீது கரூர் வாங்கள் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கானது சிபிசிஐடி க்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது சிபிசிஐடி போலீசார் முன்னாள் அமைச்சரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய பல இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் பெரியாண்டான் பகுதியில் உள்ள அம்மன் நகரில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி கவின் என்பவர் வீட்டில் இன்று சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கவின் தலைமறைவாக இருப்பதால் அவரது வீட்டில் உள்ளவர்களிடம் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.