கரூர்: கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் ₹100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நில அபகரிப்பு தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு கடந்த மாதம் 25ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் விஜயபாஸ்கர் உட்பட 3 பேர் மீது வாங்கல் போலீசார் கொலை மிரட்டல், மோசடி செய்தல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே தலைமறைவாக உள்ள விஜயபாஸ்கர் தரப்பில், இடைக்கால முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 1ம்தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம் அதற்கான உத்தரவை நேற்று (4ம்தேதி) வழங்குவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று மதியம் மீண்டும் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சண்முகசுந்தரம், இடைக்கால ஜாமீன் மனு குறித்து பரிசீலிக்காமல் 5ம்தேதி (இன்று) முன்ஜாமீன் குறித்தே விவாதிக்கலாம் எனக்கூறி ஒத்தி வைத்தார்.