புதுடெல்லி: கால்நடை தீவன ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதை தொடர்ந்து அவருக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் லாலுவுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
லாலுசார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல் கூறுகையில்,’ லாலு தற்போதுதான் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்த வழக்கில் லாலு ஏற்கனவே 42 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டார்’ என்றார். ஆனால் சிபிஐ தரப்பில்,’ ஜாமீனில் உள்ள லாலு பேட்மிண்டன் விளையாடுகிறார்’ என்று கூறினார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கை அக்டோபர் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
லாலுவை சிபிஐ துன்புறுத்துகிறது
பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியதாவது, “ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவை மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு துன்புறுத்துகிறது. பாஜ அரசு எதிர்க்கட்சி தலைவர்களை துன்புறுத்துவதற்காக ஒன்றிய அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது” என்று குற்றம்சாட்டினார்.