Sunday, June 30, 2024
Home » செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும்: பேரவையில் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ பேச்சு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும்: பேரவையில் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ பேச்சு

by Ranjith


தாம்பரம்: சட்டப்பேரவையில் நீர் வளம், இயற்கை வளம் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் மானியக்கோரிக்கைகளின் மீதான விவாதத்தில் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா (திமுக) பேசியதாவது: அரசியல் வரலாற்றிலே இதுவரை அவையை விட்டு வெளியே தூக்கி எறிந்தவர்களை மீண்டும் அவைக்கு வாருங்கள், நீங்கள் விவாதத்திலே கலந்துகொள்ளுங்கள் என்று உத்தரவை மாற்றியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்த நாகரிகத்தை அவர்கள் எப்போது கற்றுக்கொள்வது, எப்போது மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வருவது, என்னுடைய கணக்கு சரியாக இருந்தால் அவர்கள் இனிமேல் ஆட்சிக்கு வர வாய்ப்பே இருக்க முடியாதுபோல் இருக்கிறது. அந்த அளவிற்குதான் அரசியல் பார்வை இருக்கிறது. தமிழ்நாட்டில் காவிரி, வைகை, பாலாறு, தாமிரபரணி உள்ளிட்ட 17 நதிப்படுகைகள் இருந்தாலும் இவை நமது நீர்வள தேவைகளை முழுவதும் பூர்த்தி செய்வதில்லை.

அதுபோல, ஏறத்தாழ 42,000 ஏரிகளும், குளங்களும் இருந்தாலும் நீர்வள ஆதாரம் முழுமையாக 44 சதவிகிதம் தான் உள்ளது. ஆனால், 56 விழுக்காடு அளவுக்கு கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் மூலமாக நிலத்தடி நீர் தமிழகத்தின் மிகப்பெரிய நீர்வளம் ஆகும்.  எனவே, தமிழக அரசின் நீர் கொள்கை கிணறு, ஆழ்துளை கிணறுகளை சார்ந்திருக்க வேண்டிய அவசியம். இதில் புதிய தொழில்நுட்பங்கள் நிலத்தடி நீர்வளத்தை இரட்டிப்பாக்குவதற்கு திட்டங்கள் வழிவகை கண்டறிந்து ஆறுகளின் குறுக்கே அதிக எண்ணிக்கையில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்.

எனவே, மாநிலம் முழுவதும் நிலத்தடி நீர் இரு மடங்காக உயர்த்தும் நோக்கத்துடன் இவ்விரிவான சிறப்பு மாஸ்டர் பிளான் ஒன்றை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். தாம்பரம் மாநகராட்சியில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். எனக்கு தெரிந்து 66 ஆண்டுகளுக்கு முன்பாக கிராம நத்தம், காலனி நத்தம், ஏரி, குளம், குட்டை, கால்வாய், விவசாய நிலங்கள் மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் இதுபோன்றுதான் இருந்தது.

ஆனால், அப்பொழுதே 2006-11ல் தாம்பரத்தில் மட்டும் 30 ஆயிரம் பேருக்கு முதல்வர் பட்டா கொடுத்தார். பட்டா நிலங்களே இல்லை. தாம்பரத்தை பொறுத்தவரை, ஏர் போர்ஸ் 3800 ஏக்கர் நிலத்தை எடுத்துக்கொண்டார்கள். மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி 390 ஏக்கர் நிலத்தை எடுத்துக்கொண்டார்கள். ரயில்வே 500 ஏக்கர் நிலத்தை எடுத்துக்கொண்டார்கள். 19 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 10 ஏக்கர் கிரவுண்டில் நிலம் சென்று விட்டது. இருப்பதற்கு இடமே இல்லை.

ஆனால், 50 முதல் 60 ஆண்டுகாலமாக, மேட்டுப்பகுதியிலே வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஏழை, எளிய மக்கள் இன்றைக்கு என்ன கேட்கிறார்கள் என்றால், இது ஏரிப்பகுதி, இது பிட்டப்பகுதி எப்போது போட்டது? பட்டா கொடுப்பதற்கு முன்னால் எங்களுக்கே 2006ம் ஆண்டுதான் கிராம நத்தம் என பட்டாவே கொடுத்தார்கள். தாம்பரம் தொகுதியில் மட்டும் சொல்ல வேண்டுமென்றால், செம்பாக்கம் பகுதியில் இருப்பவர்கள், சிட்லப்பாக்கம் ஏரிப்பகுதியில் இருப்பவர்கள், ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் இருப்பவர்கள், அதேபோல, மாடம்பாக்கம் ஏரிப்பகுதியில் இருப்பவர்கள்-தாம்பரம் தொகுதியில் மட்டும் நான் சொல்ல வரவில்லை.

திருவள்ளூர் மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம் சென்னையை ஒட்டியிருக்கின்ற மாவட்டத்திலே இதே நிலை தான். எனவே, இருக்கின்ற ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம், நித்தம் நித்தம் கேள்விக்குறியாகி இருக்கிறது. அமைச்சரை கேட்டால், நீதிமன்றம் என்று சொல்கிறார். தயவு செய்து சொல்கிறேன்.

நம்முடைய ஆட்சி, ஏழையெளிய மக்களுக்காக இருக்கின்ற ஆட்சி, நீதிமன்றத்திலே எதை எடுத்துச் சென்றாலும் வெற்றி பெற முடியும். தனித்தனியாக இதை ஆய்வு செய்து, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டியது இந்த அரசு. அனுபோக பாத்தியம் என்று ஒரு சான்றிதழ் ஏற்கனவே கிராமங்களில் இருந்தது. அதை தர வேண்டும். அமைச்சர் நினைத்தால் முடியாதது ஒன்றுமில்லை என்றார்.

You may also like

Leave a Comment

ten + 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi