இம்பால்: மணிப்பூர் மாநிலம் இம்பால் மேற்கு மாவட்டம் நவுரெம்தாங் பகுதியில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீ ராம் ஹங்சாதா (41) வசித்து வந்தார். கூலித் தொழிலாளியான அவர், அவரது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத சிலர், திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் ஸ்ரீ ராம் ஹங்சாதா ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
அவரை காப்பாற்ற முயன்ற பிட்டு முர்மு (22), மிதலால் சோரன் (50) ஆகிய இருவர் மீதும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் இருவரும் படுகாயமடைந்தனர். இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பியது. காயமடைந்த இருவரும் இம்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.