சென்னை: தொழிலாளர் உரிமையை பறிக்கும் சட்டத்தை முதலமைச்சர் திரும்ப பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். சட்டம் நிறைவேற்றப்பட்டது தொழிலாளர் உணர்வுக்கும், உரிமைக்கும் எதிரானது. தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்தை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைக்க வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் கதவுகளை மூடி, வேலை நேரத்தை அதிகரிப்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. சட்டத்தை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டத்தை இந்திய கம்யூ. முழுமையாக ஆதரிக்கிறது என்று முத்தரசன் தெரிவித்தார்.
தொழிலாளர் விரோத சட்டத்தை கைவிடுக – சிபிஎம்
தொழிலாளர் விரோத சட்டத்தை கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் 12 மணி நேர வேலைக்கான சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியிருப்பது கண்டனத்துக்குரியது. தொழிலாளர் விரோத சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.
12 மணி நேர வேலை மசோதா – அமைச்சர்கள் விளக்கம்
12 மணி நேர வேலை மசோதா குறித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன் கூட்டாக விளக்கம் அளித்தனர். அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, மின்னணுவியல், மற்றும் ஐ.டி. நிறுவனங்கள், காலணி கம்பெனிகள் 12 மணி நேர வேலையை எதிர்பார்க்கின்றன. முதலீடு செய்ய வரும் பன்னாட்டு நிறுவனங்கள், வேலை நேரத்தில் நெகிழ்வுத்தன்மையை எதிர்பார்க்கின்றன. என்றார். தொழிலாளர்களின் விருப்பமின்றி 12 மணி நேர வேலை வழங்கப்படக்கூடாது என்று அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.
வாரத்துக்கு 48 மணி நேரம் பணிபுரியும் நடைமுறை தொடரும். 4 நாட்கள் தினசரி 12 மணி நேர வேலை பார்த்தால் 3 நாட்கள் விடுமுறை வழங்க சட்ட மசோதா வழிவகை செய்கிறது. எல்லா நிறுவனங்களுக்காக அல்ல, குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்காகவே மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.