சென்னை: குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்துக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; குவைத்தின் தீ விபத்தில் மனிதச் சதைகள் கருகிய வாசம் உலகக் காற்றில் வீசுகிறது. இறந்த பின்தான் தகனம் செய்வார்கள்; தகனம் செய்து இறப்பைத் தந்திருக்கிறது நெருப்பு. இதயத்தின் மெல்லிய தசைகள் மெழுகாய் உருகுகின்றன. உலகம் தோன்றிய நாளிலிருந்து விபத்துகள் புதியனவல்ல.
விஞ்ஞானம் வளர்ந்தபின்னும் அது தொடர்வது பாதுகாப்பு அளவீடுகளின் குறைபாடுகளைக் காட்டுகிறது. மனிதத் தவறுகள் திருந்தவில்லை என்று வருந்திச் சொல்கிறது. மாண்டவர்களுக்காக அழுது முடித்த இடத்தில் அழத் தேவையில்லாத சமூகத்தை வார்த்தெடுக்க வழி சமைப்போம். உலகத் தொழிலாளர்களுக்கு என் இந்தியக் கண்ணீர் என்று குறிப்பிட்டுள்ளார்.