குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; குவைத் நாட்டில் உள்ள மாங்காப் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், நமது நாட்டைச் சேர்ந்த 40 பேர் பலியாகியுள்ளனர் என்று முதற்கட்ட தகவலில் வருந்தத்தக்க செய்திகள் கிடைத்துள்ளது.
இந்த செய்தி கேட்ட உடனே பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி, வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வரதன் சிங் அவர்களை குவைத் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, இந்தியாவில் உள்ள அவர்களின் உறவினர்களிடம் விரைந்து சேர்க்கப்படும். 30-க்கும் மேற்பட்ட காயமடைந்த இந்தியர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளும், நிவாரணங்களும் தகுந்த முறையில் செய்து தரப்படும்.
இறந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.