Friday, September 20, 2024
Home » அனைத்து குடும்பத்தினரையும் கவர்ந்த குங்குமம் தோழியின் ஷாப்பிங் திருவிழா!

அனைத்து குடும்பத்தினரையும் கவர்ந்த குங்குமம் தோழியின் ஷாப்பிங் திருவிழா!

by Lavanya

நன்றி குங்குமம் தோழி

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தினகரன்-குங்குமம் தோழியின் மாபெரும் ஷாப்பிங் திருவிழா கடந்த வாரம் மூன்று நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வினை அமைச்சர் கீதா ஜீவன் துவங்கி வைத்தார். மூன்று நாட்கள் நடைபெற்ற ஷாப்பிங் திருவிழாவில் பெண்களுக்குத் தேவையான வீடு மற்றும் அழகு சாதனப் பொருட்களும் ஒரே இடத்தில் இடம் பெற்றிருந்தது.

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் கீதா ஜீவன், கனரா வங்கி பொது மேலாளர் சிந்து, லைஃப்லைன் மருத்துவமனை தலைமை இயக்க அதிகாரி டாக்டர் நடேஷ், யூனியன் பேங்க் ஆப் இந்தியா பொது மேலாளர் ஸ்ரீ சத்யபன் பெஹேரா, பதஞ்சலி துணைத்தலைவர் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி விழாவினை இனிதே தொடங்கி வைத்தார்கள்.

‘தோழியின்’ மாபெரும் ஷாப்பிங் திருவிழாவை தொடங்கி வைத்த அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள், மாதம் இருமுறை வெளியாகும் ‘குங்குமம் தோழி’ இதழில் பெண்களின் முன்னேற்றம், ஆரோக்கியம், தொழில் போன்ற அனைத்துவிதமான தகவல்கள் வெளியாவதை பற்றி குறிப்பிட்டு பேசினார். மேலும் கண்காட்சியில் அரங்கம் அமைத்திருந்த பெண் தொழில்
முனைவோர்களுக்கு தன்னுடைய வாழ்த்தினை தெரிவித்தார்.

‘‘இது போன்ற கண்காட்சியில் பெண்கள் அதிகமாக இடம் பெறும் போது அவர்களின் தொழில் முன்னேற்றம் அடையும்’’ என்று குறிப்பிட்டார். ‘‘பெண்கள் ஷாப்பிங் பிரியர்கள். அவர்களுக்கு இது போன்ற கண்காட்சி மிகவும் உபயோகமாக இருக்கும்’’ என்றும் கூறினார். ‘‘தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உழைக்கும் மகளிருக்காக விடியல் திட்டம், புதுமை பெண் திட்டம் என பல திட்டங்களை பெண்களுக்காக அறிமுகம் செய்துள்ளதாகவும். அதன் மூலம் இளம் பெண் தொழில்முனைவோர்கள் பலன் அடையலாம்’’ என்று குறிப்பிட்டவர், கண்காட்சியில் இடம் பெற்றிருந்த அரங்குகளை பார்வையிட்டு, தொழில்முனைவோரிடம் பொருட்களை பெற்று அவர்களை மேலும் ஊக்குவித்தார்.

தொடக்க நாள் வாரநாள் என்றாலும் ஏராளமானோர் கண்காட்சியை கண்டுகளித்தது மட்டுமில்லாமல் தங்கள் இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றார்கள். ஷாப்பிங் திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளை கவரும் வகையில் விதவிதமான பொருட்கள் இடம்பெற்றிருந்தது. மறுநாள் விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினம் என்பதால் பூஜை முடித்த கையோடு, குடும்பம் சகிதமாக பலர் கண்காட்சியை காண வந்தார்கள். சென்னை மட்டுமில்லாமல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பலர் வந்திருந்தனர். குறிப்பாக காஞ்சிபுரம் பட்டுச்சேலைகள், ஃபேன்சி மற்றும் வைர நகை கடைகள், கைவினை மற்றும் எலக்ட்ரானிக் ெபாருட்கள், அழகு சாதனப் பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள் உள்ள கடைகளில் கூட்டம் அலைமோதின. கண்காட்சியில் பலவித உணவுகள், இனிப்பு பண்டங்களும் விற்பனை செய்யப்பட்டன.

தொடர் விடுமுறையால் மூன்று நாட்கள் நடைபெற்ற திருவிழாவிற்கு ஏராளமானோர் குடும்பத்தினருடன் வந்து கண்காட்சியை கண்டுகளித்து மகிழ்ந்தது மட்டுமில்லாமல் அவர்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் மற்றும் தின்பண்டங்களை வாங்கி சென்றார்கள். மேலும் விழாவிற்கு வந்திருந்த மக்கள் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு இருப்பதை காண முடிந்தது. சோர்வினை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய மசாஜ் கருவியினை மக்கள் விரும்பி வாங்கினார்கள். எந்தவித எண்ணெய் இல்லாமால் மொறுமொறுவென்று அப்பளம், வத்தல், பாப்கார்ன் போன்றவற்றை எளிதில் பொரிக்கக்கூடிய ஏர் பிரையர் மக்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் வீட்டை எளிதில் சுத்தப்படுத்தும் மாப்பினையும் பலர் வாங்கிச் சென்றார்கள். அடுத்து மிகக் குறைந்த விலையில் விற்கப்பட்ட எலக்ட்ரானிக் அரங்கில் மக்களின் கூட்டம் அலைமோதிக் கொண்டிருப்பதை காண முடிந்தது. அடுத்து ஆதிவாசிகளின் ஆரோக்கிய ஆலோசனைக்கும் மக்கள் தங்களின் செவிகளை சாய்த்தனர். இயற்கை மூலிகையில் தயாரிக்கப்பட்ட குளிர்பானம், மூலிகை பவுடர்கள், சுக்கு காபி, முளைக்கட்டிய தானியங்களையும் குடும்பம் குடும்பமாக வாங்கிச் சென்றார்கள். குறிப்பாக பெண்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதை விட நேரடியாக வந்து பொருட்களை வாங்குவது பிடித்தமானதாக இருப்பதாக தெரிவித்தார்கள்.கோலாகலமாக மூன்று நாட்கள் நடைபெற்ற குங்குமம் தோழி இதழ் நடத்திய பிரமாண்டமான ஷாப்பிங் திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் குறித்து கண்ணோட்டம்.

மாம்மா கேர்

பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு தான் ஆரோக்கிய பராமரிப்பு இருக்கும். குழந்தை பிறந்த பிறகு அவர்களுக்கு என தனிப்பட்ட கவனம் யாரும் செலுத்துவதில்லை. ஆனால் குழந்தை பிறந்த 42 நாட்கள் தாயின் நலனை முழுமையாக கவனிக்க வேண்டும் என்றார் மாம்மா கேரின் நிறுவனர் நாசிமா. ‘‘அந்தக் காலத்தில் வீட்டில் பெரியவர்கள் குழந்தை பெற்றெடுத்த பெண்ணின் உடல், மனம் மற்றும் உணவு முறையில் தனிப்பட்ட கவனம் செலுத்தினார்கள்.

ஆனால் இன்று அதை சொல்ல யாரும் இல்லை. என்னுடைய இரண்டு குழந்தை பிரசவத்தின் போது நான் சந்தித்த பிரச்னையை மற்றவர்கள் சந்திக்கக்கூடாது என்ற அடிப்படையில்தான் இதனை துவங்கினேன். ஹெர்பல் பாத், மசாஜ், ஃபேஷியல், ஆரோக்கியம், லாக்டேஷன் என அனைத்திற்கான சேவைகளை நாங்க வீட்டிற்கே வந்து கொடுக்கிறோம். முழுக்க முழுக்க ஆயுர்வேத முறையில் செய்வதால் தாய்மார்கள் எந்தவித தயக்கம் இன்றி இதனை பெறலாம். குழந்தை பிறந்த முதல் 42 நாட்கள் மேற்கொள்ளும் போது உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறி கர்ப்பப்பை சுறுங்கி அவர்கள் பழைய நிலைக்கு திரும்புவார்கள். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்கள் 15 நாட்கள் கழித்து ஆலோசனை பெறலாம்’’ என்றார் நாசிமா.

கோவை லட்சுமி கிரைண்டர்

ஆட்டுக்கல்லில் மாவினை ஆட்டி இட்லி சுடுவது எல்லாம் மறைந்துவிட்டது. கடையில் இட்லி மாவு வாங்கினோமா இட்லி, தோசை சாப்பிட்டோமா என்ற நிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். ஆட்டுக்கல்லினை தூக்கி அதில் மாவு அரைக்க சிரமமாக இருப்பதுதான் காரணம். அதனை எளிதாக்க நாங்க 2 முதல் 6 லிட்டர் அளவு கிரைண்டர்களை வழங்குகிறோம். டில்டிங் மாடல் என்பதால் பராமரிப்பதும் சுலபம். அவரவர் குடும்பத்திற்கு ஏற்ற அளவில் உள்ளது. கண்காட்சியில் புக்கிங் செய்பவர்களுக்கு ஒரு லிட்டர் அளவு கிரைண்டர் இலவசமாகவும் கொடுக்கிறோம். அரைக்கும் கல் தேய்ந்துவிட்டால் அதனை சென்னையில் கோடம்பாக்கம், தாம்பரம், அம்பத்தூர் போன்ற இடங்களில் உள்ள எங்க விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டரில் மாற்றிக் கொள்ளலாம்.

தாய்ப்பால் அணிகலன்கள்

தாய்ப்பால் மற்றும் பிறந்த குழந்தைகளின் தலைமுடிகள், நகங்கள் கொண்டு அணிகலன் கள் செய்து காட்சிப்படுத்தி இருந்தார் தாரிகா. ‘‘முழுக்க முழுக்க தாய்ப்பால் கொண்டு அணிகலன்களை வடிவமைக்கிறோம். விருப்பப்படுபவர்கள் எங்களை அணுகினால் நாங்க ஒரு கிட் அவர்களுக்கு அனுப்புவோம். அதில் அவர்கள் தாய்ப்பால் மற்றும் குழந்தையின் தலைமுடி, தொப்புள்கொடி போன்றவற்றை எங்களுக்கு சேமித்து அனுப்ப வேண்டும். அதனை நாங்க அவர்கள் விரும்பும் மோதிரம், வளையல், பிரேஸ்லெட் போன்ற அணிகலன்களாக செய்து தருகிறோம்.’’

ஆயுர்வேதிக் கிரீம்கள்

அழகாக காட்சிப்படுத்தும் ரசாயனம் கலந்த அழகு சாதனங்கள் ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு கெடுதலே செய்கிறது என்பதைப் புரிந்துகொண்ட பெண்கள் இயற்கை சார்ந்த அழகு பொருட்களுக்கு மாறி வருகிறார்கள். அதன் அடிப்படையில் முழுக்க முழுக்க இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி சருமம் மற்றும் தலைமுடிக்கு அழகு சாதனப் பொருட்களை தயாரித்து வருகிறார் சக்திமது.

‘‘என்னுடைய ‘திக்ரூட்’ அழகு சாதனப் பொருட்களில் எந்தவித கலப்படம் இல்லாமல் சருமம் முதல் கூந்தல் பராமரிப்பு என ஒரு பெண்ணிற்கு தேவையான அனைத்தும் தயாரிக்கிறேன். செம்பருத்தி ஷாம்பு, குங்குமப்பூ சேர்க்கப்பட்ட ஆலோவேரா ஜெல், கரிசாலங்கண்ணி கண்மை, சருமத்தில் சுறுக்கத்தை நீக்கும் குங்குமாதி தைலம், மருதாணி கொண்ட கால் பாத வெடிப்பை போக்கும் கிரீம் என அனைத்தும் இயற்கை முறையில்தான் தயாரிக்கிறோம். மேலும் கடற்புல்கள் கொண்டு பின்னப்பட்ட கூடைகளும் உள்ளது’’ என்றார்.

முகத்தை ஸ்கேன் செய்யும் செயலி!

‘‘இன்றைய காலக்கட்டத்தில் பெண்களை மார்பகப் புற்றுநோய் அதிகமாக தாக்குகிறது. ஆனால் இது குறித்த விழிப்புணர்வு அவர்களிடம் இல்லை. அது குறித்த விழிப்புணர்வை பெண்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறோம். மருத்துவ துறையிலும் நவீன தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. அதன் அடிப்படையில் முகத்தை மட்டுமே ஸ்கேன் செய்து, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்றவற்றை கண்டறியக்கூடிய எளிய செயலி ஒன்றை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம்’’ என்றார் லைஃப்லைன் மருத்துவமனை தலைமை இயக்க அதிகாரி மருத்துவர் நடேஷ்.

ஹெர்போதையா

‘‘சித்தா முறைப்படி முழுக்க முழுக்க மூலிகைகள் கொண்டுதான் எங்களின் அனைத்துப் பொருட்களும் தயாரிக்கப்படுகிறது. ரசாயன மற்றதால் பக்க விளைவுகள் ஏற்படாது. எங்களின் தயாரிப்பில் ரோஜா இதழ் பன்னீர், உடல் மற்றும் மனதினை குளுமைபடுத்தும். வேம்பு மற்றும் ஆலோவேரா ஹாண்ட் வாஷ், மிகச்சிறந்த கிருமி நாசினி. சீயக்காய், அரப்பு தூள், திரிப்பெல்லா, பிரிங்கா சேர்க்கப்பட்ட ஹெர்பல் ஷாம்பு பொடுகு, முடி கொட்டுவதை கட்டுப்படுத்த உதவும்.

சருமத்தில் உள்ள பிக்மென்டேஷனை போக்கும் குங்குமாதி கிரீம். சருமம் பளபளக்க ரோஸ், சந்தனம் மற்றும் குங்குமப்பூ ஃபிளேவர்களில் முல்தானி மெட்டி. குங்குமாதி, ஆலோவேரா, சந்தனம் ஃபிளேவர்களில் சோப்கள். அனைத்தும் சித்தா முறைப்படி ஆய்வு செய்யப்பட்டு ஈரோட்டில் எங்களின் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது’’ என்றனர்.

தொகுப்பு: ப்ரியா

படங்கள்: விநாயகம், சதீஷ், கணேஷ்

You may also like

Leave a Comment

nineteen + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi