Tuesday, September 17, 2024
Home » 2024 இறுதிக்குள் 2250 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

2024 இறுதிக்குள் 2250 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

by MuthuKumar
Published: Last Updated on

நெல்லை: தமிழகத்தில் இந்தாண்டு இறுதிக்குள் 2250 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்படும் என நெல்லை மானூர் அம்பலவாணர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். நெல்லை மாவட்டம் மானூரில் அமைந்துள்ள பழமையான அம்பலவாணர் கோயிலில் 112 ஆண்டுகளுக்கு பின் இன்று காலையில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இவ்விழாவில் பங்கேற்ற அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி; நெல்லை மாவட்டம் மானூரில் பழமையான அம்பலவாணர் கோயிலில் கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடைபெற்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான 32 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் 2098 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

மானூர் அம்பலவாணர் கோயில் உள்பட 55 திருக்கோயில்களில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. தொன்மையான திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தவும், தேர்களை பாதுகாக்க கொட்டகைகள் அமைக்கவும், கோயில் குளங்களை பாரமரித்து பாதுகாக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அம்பலவாணர் கோயிலுக்கு சொந்தமான நஞ்ைச நிலம் 173 ஏக்கர், புஞ்சை நிலம் 28 ஏக்கர் கோயில் திருப்பணிக்காவும், நித்ய பூஜை செலவுகளுக்காவும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. திமுக ஆட்சி அமைந்த பின் திருவட்டாறு போன்ற கோயில்கள் மட்டுமல்லாமல் உத்திரமேரூர் வரதராஜபெருமாள் கோயில் மற்றும் 300 ஆண்டுகளுக்கு மேலான கோயில்களிலும் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அரிகேசவநல்லூர் சிவன் கோயில் 123 ஆண்டுக்கு பின் திருப்பணிகள் நடத்தப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. தொன்மையான 16 கோயில்களுக்கும், நூறு ஆண்டுகளுக்குட்பட்ட 60 கோயில்களுக்கும் திமுக ஆட்சி காலத்தில்தான் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 2250 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்படும். 805 கோயில்களுக்கு சொந்தமான 6 ஆயிரத்து 703 கோடி ரூபாய் மதிப்புள்ள 6 ஆயிரத்து 853 ஏக்கர் நிலங்கள் திமுக ஆட்சியில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட இடங்களில் கோயில்களின் பெயர்களுடன் கூடிய பலகைகள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் ரூ.92 கோடியில் கோயில்களில் 47 புதிய ராஜகோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன.

கோயில்களுக்கு ரூ.59 கோடியில் புதிய மரதேர்கள் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. ரூ.11 கோடியே 92 லட்சம் செலவில் பாரம்பரிய பழமையான மரத்தேர்கள் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

nineteen − 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi