கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு, மார்த்தாண்டம் உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 6 அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். நாகர்கோவிலில் காங்கிரசார் மீது தாக்குதல் நடத்தியதாக மாவட்ட பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பேருந்துகளின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ராகுல் காந்தியின் எம்.பி. பதவி நீக்கத்தை கண்டித்து நாகர்கோவிலில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்குப்பதிந்து 53 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜை சுங்கான்கடை அருகே போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.
இதற்கு தர்மராஜன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை திருவட்டார், புதுக்கடை, நித்திரவிலை, மார்த்தாண்டம் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல் வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 6 பேருந்துகளின் கண்ணாடிகள் சேதமடைந்தன. சில இடங்களில் மின் இணைப்பை துண்டித்துவிட்டு மர்மநபர்கள் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக கூறப்படும் நிலையில், அசம்பாவிதங்களை கண்காணிக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.