தூத்துக்குடி: தென்தமிழகத்தில் அழகிய கடற்கரை நகரமான குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயில், உலக பிரசித்திப் பெற்றது. நவராத்திரி விழாவே இங்கு தசரா திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மைசூருக்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற தசரா திருவிழாவை முன்னிட்டு வரும் அக்.2ம் தேதி நண்பகல் 11 மணிக்கு காளிபூஜையும், இரவு 9 மணிக்கு அம்மன் காப்பு கட்டுதலும் நடக்கிறது.
அக்.3ம் தேதி காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடி பட்டம் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு காலை 9.30 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், பன்னீர், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகம் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூரசம்ஹாரம், 10ம் திருநாளான வரும் அக்.12ம் தேதி நடக்கிறது. அன்று காலை 6 மணி, 7.30 மணி, காலை 9 மணி, காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வர் முன்பாக எழுந்தருளி மகிஷாசூரனை சம்ஹாரம் செய்கிறார்.