உடன்குடி: மைசூருக்கு அடுத்தப்படியாக தசரா திருவிழா, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான தசரா திருவிழா, இன்று (3ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று காலை 11 மணிக்கு காளி பூஜை, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இன்று அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து காலை 9.30 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கோயில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது. சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வரும் 12ம் தேதி நள்ளிரவு நடக்கிறது.