Sunday, September 8, 2024
Home » விடிய விடிய கிரிவலம்; தி.மலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

விடிய விடிய கிரிவலம்; தி.மலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

by MuthuKumar

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி பக்தர்கள் இன்று விடிய விடிய கிரிவலம் வந்தனர். மேலும் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும் உள்ள திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தென்னகத்து கயிலாயம் என போற்றப்படுகிறது. மலையை மகேசன் திருவடிவம் என்பதால், மாதம்தோறும் பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று அதிகாலை 4.02 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 2.24 மணிக்கு நிறைவு பெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவே திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வர தொடங்கினர். தொடர்ந்து இன்று அதிகாலை வரை விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர்.

அதிகாலையுடன் பவுர்ணமி நிறைவு பெற்றாலும், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வெளிமாவட்ட, வெளி மாநில பக்தர்கள் என கிரிவல பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்து காணப்பட்டது. 14 கிலோ மீட்டர் தூரமும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. அண்ணாமலையார் கோயிலில் வெளிப்பகுதியில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதன்படி சுமார் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பவுர்ணமியை முன்னிட்டு 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டது. அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. அதேபோல் விழுப்புரம், வேலூர் வழித்தடங்களில் பவுர்ணமி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. இருப்பினும் இன்று காலை சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இதனால் கிரிவலம் முடிந்து திரும்பிய பக்தர்கள் குறைந்தளவே இயங்கிய பஸ்களிலும், ரயில்களிலும் முண்டியடித்தபடி ஏறிச்சென்றனர்.

You may also like

Leave a Comment

three × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi