Monday, July 1, 2024
Home » கிருஷ்ணராயபுரம் அருகே திம்மாச்சிபுரத்தில் முலாம்பழம் சாகுபடியில் அசத்தும் கரூர் விவசாயி

கிருஷ்ணராயபுரம் அருகே திம்மாச்சிபுரத்தில் முலாம்பழம் சாகுபடியில் அசத்தும் கரூர் விவசாயி

by Lakshmipathi

*சொட்டுநீர் பாசனத்தில் மும்முரம்

*செலவு ரூ.50,000, லாபம் 2 மடங்கு

கிருஷ்ணராயபுரம் : கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த திம்மாச்சிபுரம் பகுதியில் விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டும் வகையிலும், தொழில்நுட்ப முறையில் விவசாயத்தில் ஈடுபட்டு வருவதால் அதிக லாபம் ஈட்டு வருகின்றார்.குறுகிய கால சாகுபடியான தர்பூசணி சாகுபடி மற்றும் முலாம்பழம் சாகுபடி பருவ காலத்திற்கு ஏற்றவாறு சொட்டுநீர் பாசனம் மூலமாக விவசாய பணியில் ஈடுபட்டு வருகின்றார். இவர் தற்போது முலாம்பழம் சாகுபடியில் ஈடுபட்டுள்ளார்.

சாகுபடி முறை:

முலாம்பழம் சாகுபடி பொறுத்தவரை ரகங்களில் அர்கா ராஜ்கான்ஸ், அர்கா ஜீட், பூசா சர்பதி, பூசா மதுரகஸ், பஞ்சாப் சன், துர்காபுரா மாது மற்றும் பஞ்சாப் ரசிலாஹெரி ஆகிய இரகங்கள் உள்ளன.

சாகுபடி பருவ காலம்:

டிசம்பர் முதல் ஜனவரி மாதங்களில் விதை விதைத்தால் கோடை காலத்திற்கு நல்ல விளைச்சலைக் கொடுக்கும். மானாவாரிப் பயிராக ஜூன் மாதத்திலும் விதைக்கலாம். செம்மண், மணல் கலந்த செம்மண் மற்றும் மணல். சரியான மணல் வகைகள் சாகுபடிக்கு ஏற்றது. மண்ணின் கார அமில தன்மை 6.5 முதல் 7.5 வரை இருக்கவேண்டும். முலாம்பழம் சாகுபடி தேர்ந்தெடுத்த நிலத்தை 3 அல்லது 4 முறை உழுது ஏக்கருக்கு 50 டன் மக்கிய தொழு உரத்தை இட்டு நிலத்தை சாகுபடிக்கு பயன்படுத்த வேண்டும்.

பின்பு 2 அடி (60 செ.மீ) அகலத்திற்கு நீளமான வாய்க்கால்களை 2 மீட்டர் இடைவெளியில் எடுக்க வேண்டும். வாய்க்கால்களின் பக்கவாட்டில் 45 x 45 x 45 செ.மீ அளவுள்ள குழிகளை ஒரு மீட்டர் இடைவெளியில் தோண்டி மண்புழு அல்லது கலப்பு உரங்களைப் போட்டு, மண்ணுடன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

விதை அளவு:

ஏக்கருக்கு 3 கிலோ விதைகள் சாகுபடிக்கு போதுமானது. விதையை 4.0 கிராம் டிரைகோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனஸ் ப்ளோரசன்ஸ் அல்லது கார்பன்டிசம் ஏக்கருக்கு 2 கிராம் கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும். நேர்த்தி செய்த விதைகளை குழிகளின் மத்தியில் மூன்று அல்லது நான்கு விதைகள் வீதம் 0.6 மீ இடைவெளியில் ஊன்ற வேண்டும்.

உர மேலாண்மை:

55 கிலோ மணிச்சத்து, 55 கிலோ சாம்பல்சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அடியுரமாக இடவேண்டும். ஏக்கருக்கு தழை மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் முறையே 200:100:100 கிலோ பயிர் காலம் முழுவதும் பகிர்ந்து அளிக்க வேண்டும்.

ஊட்டச்சத்து ஜீவாமிர்தம்:

முலாம்பழம் சாகுபடி பொறுத்தவரை பூச்சித்தாக்குதல் 8ம் நாளில் இருந்து தென்பட ஆரம்பிக்கும். அப்போது ஒரு டேங்க் தண்ணீருக்கு (10 லிட்டர்) 100 மில்லி மீன் அமிலம், 100 மில்லி மூலிகைப் பூச்சிவிரட்டி ஆகியவற்றை கலந்து ஏக்கருக்கு 5 டேங்குகள் வீதம் தெளிக்க வேண்டும். 10ம் நாள் முதல் வாரம் ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைலை பாசன நீரில் கலந்து விட வேண்டும். தலா 10 கிலோ வீதம் கடலைப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு, பருத்திப் பிண்ணாக்கு, தேங்காய்ப் பிண்ணாக்கு ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் நான்கு நாட்கள் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். 15-ம் நாளில் இந்தக் கரைசலை ஒவ்வொரு செடிக்கும் 100 மில்லி வீதம் ஊற்ற வேண்டும்.

விதையூக்தி அளித்தல்:

10 லிட்டர் தண்ணீரில் 2.5 கிராம் எத்ரல் வளர்ச்சி ஊக்கியை நன்கு கலக்கி விதைத்த 15 நாட்கள் கழித்தும், பின் வாரம் ஒரு முறை என 4 வாரங்களுக்கு செடியின் மீது தெளிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு:

முலாம்பழம் சாகுபடி பொறுத்தவரை இலை வண்டுகளைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 1 மி.லி மாலத்தியான் அல்லது 2 கிராம் காப்பர்கலந்து வாரத்திற்கு ஒரு முறை தெளிக்க வேண்டும். வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டைக் கரைசல் 5% தெளிக்க வேண்டும். காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட காய்களைப் பறித்து அழிக்க வேண்டும். நிலத்தை நன்கு உழுது கூட்டுப்புழுக்களை சூரிய ஒளியில் நன்கு படுமாறு செய்து அவற்றை அழிக்க வேண்டும்.

களை நிர்வாகம்:

விதை விதைத்ததில் இருந்து 30 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும். பொதுவாக 3 முறை களை எடுக்க வேண்டும். விதைகளை விதைத்து 15 நாட்கள் கழித்து குழிக்கு 2 நாற்றுக்களை மட்டும் விட்டு மீதியை நீக்கிவிட வேண்டும்.

சொட்டுநீர் பாசனம் முறை:

முலாம்பழம் சாகுபடிக்கு சொட்டு நீர் அமைத்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும் அதில் ஒரு ஏக்கருக்கு முதல் ஐந்து நிமிடம் சாதாரண தண்ணீரும் அடுத்த ஐந்து நிமிடம் உரம் கலந்த தண்ணீரும் அடுத்த ஐந்து நிமிடம் சாதாரண தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும்.

முலாம்பழம் சாகுபடி அறுவடை:

காய்களின் மேற்பரப்பிலுள்ள வலைகளுக்கு இடைப்பட்ட பகுதி மஞ்சள் நிறமாகவும், வலைகள் மங்கலான வெள்ளை நிறமாகவும் மாறும்போது அறுவடை செய்ய வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 20-25 டன் வரை முலாம்பழம் கிடைக்கும். மேலும் ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் செலவு ஆகும் ஆனால் ஈட்டும் வருவாய் இரு மடங்கு லாபம் கிடைக்கும் அதாவது முறையாக சரியான காலத்தில் அறுவடை செய்வதால் லாபம் மட்டும் ஒரு லட்சம் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும் அறுவடை காலங்களில் வியாபாரிகள் நேரடியாக அவர்களே நமது தோட்டத்தில் வந்து எடுத்து செல்கின்றனர் இதன் மூலம் நமக்கு வாகன செலவும் இருப்பதில்லை.விவசாயி கூறுகையில் இளைஞர்கள் பெரும்பாலும் விவசாயத்தில் முறையாக ஈடுபட்டு குறுகிய கால வருவாயீட்டும் இது போன்ற சாகுபடிகள் ஈடுபடுவதால் நல்ல வருமானமும் கிடைக்கும்.

You may also like

Leave a Comment

5 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi