Wednesday, September 18, 2024
Home » கிருஷ்ணகிரி மாணவி பலாத்கார வழக்கில் கைதான நாம் தமிழர் நிர்வாகி ரூ.36 லட்சம் மோசடி: வக்கீல் என கூறி போலி கோர்ட் ஆணை கொடுத்து ஏமாற்றியதாக எஸ்பி ஆபீசில் புகார்

கிருஷ்ணகிரி மாணவி பலாத்கார வழக்கில் கைதான நாம் தமிழர் நிர்வாகி ரூ.36 லட்சம் மோசடி: வக்கீல் என கூறி போலி கோர்ட் ஆணை கொடுத்து ஏமாற்றியதாக எஸ்பி ஆபீசில் புகார்

by Arun Kumar

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே மாணவியை பலாத்கார வழக்கில் கைதான நாம் தமிழர் நிர்வாகி, வக்கீல் என கூறி ரூ.36 லட்சம் மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்டவர்கள் நேற்று எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில், தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

13 மாணவிகள் பாலியல் ரீதியாக தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டனர். இது குறித்து போலி என்சிசி முகாம் நடத்தி சிறுமியை பலாத்காரம் செய்த காவேரிப்பட்டணம் காந்தி நகர் காலனியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன் (35), போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். வழக்கு பதிவானதும் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். மாணவி பலாத்கார சம்பவத்தை மறைக்க முயற்சி செய்த பள்ளி முதல்வர், தாளாளர், ஆசிரியைகள், பயிற்சியாளர்கள் உள்பட மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அந்த பள்ளிக்கு 3வது நாளாக நேற்றும் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், சிவராமன் தன்னை வக்கீல் என கூறி ரூ.36 லட்சம் மோசடி செய்ததாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி அடுத்த கொண்டேபள்ளி கிராமத்தை சேர்ந்த சக்திவேல், மோகன், சாந்தி, நாராயணன், மஞ்சுளா, கோவிந்தசாமி மற்றும் சந்திரா ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது: பெத்ததாளப்பள்ளி கிராமத்தில் எங்களுக்கு பாத்தியப்பட்ட சொத்தை வேறொருவர் போலியான கிரைய பத்திரம் தயார் செய்து சுவாதினத்தில் வைத்துள்ளார். அந்த சொத்தை மீட்டுத் தருவதாகவும் தான் ஒரு வக்கீல் எனவும் சிவராமன் எங்களிடம் அறிமுகமானார்.

பின்னர் மாவட்ட முதன்மை நீதிமன்ற உத்தரவு என போலியான நீதிமன்ற ஆணையை எங்களிடம் காண்பித்து நீதிமன்ற வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என கூறி எங்களிடம் மொத்தம் ரூ.36 லட்சத்து 20 ஆயிரத்தை சிவராமன் வசூலித்தார். பின்னர் அதற்கு வங்கி கணக்கில் செலுத்தியது போன்ற போலியான வங்கி ரசீதையும் காண்பித்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிவராமன் கைது செய்யப்பட்டது தெரிய வந்தது.

மேலும் அவர் போலியாக என்சிசி முகாம் நடத்தியதும், போலியாக தன்னை வழக்கறிஞர் என காட்டிக்கொண்டதும் எங்களுக்கு தெரிய வந்தது. ஆகவே வக்கீல் என கூறி எங்களை ஏமாற்றிய சிவராமன் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்களுடைய பணம் ரூ.36 லட்சத்து 20 ஆயிரத்தை மீட்டு தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மாணவிக்கு ஷீல்டு, மெடல்கள் வழங்கி பள்ளி முதல்வர் சமாதான முயற்சி

போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமனால் கடந்த 8ம் தேதி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான மாணவி முதலில் தன்னுடன் வந்த சீனியர் மாணவிகளிடம் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கூறினார். பின்னர் அந்த மாணவிகளுடன் சேர்ந்து பள்ளி முதல்வர் சதீஷ்குமாரிடம் நடந்த சம்பவத்தை கூறினார். அவர் இந்த விஷயத்தை பெரிதுபடுத்தாதீங்க. வீட்டில் யாருக்கும் சொல்லாதீங்க. பெற்றோர் கஷ்டப்படுவாங்க என கூறியுள்ளார். அதன் பிறகு கடந்த 9ம் தேதி மதியம் பள்ளி ஆடிட்டோரியத்தில் பரிசளிப்பு விழா நடந்துள்ளது. அந்த விழாவில், பள்ளி முதல்வர் சதீஷ்குமார், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஒரு ஷீல்டு, 3 மெடல்களை கொடுத்து, மீண்டும் அந்த விஷயத்தை பெரிதுபடுத்தாதீங்க என கூறியுள்ளார். மாணவியை சமாதானப்படுத்த முதல்வர் மேற்கொண்ட முயற்சி பற்றி போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

* நாம் தமிழர் கட்சி பெயரில் அதிகாரியை மிரட்டிய சிவராமன்

கைதாகியுள்ள சிவராமன், கடந்த 15 நாட்களுக்கு முன் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுடன் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு சென்றுள்ளார். அங்கு தடகளம், கூடைப்பந்து விளையாட வேண்டும் என்று மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபாலிடம் கேட்டுள்ளார். அவர் நீங்கள் யார், எங்கிருந்து வருகிறீர்கள் என்று விசாரித்த போது, நான் நாம் தமிழர் கட்சியில் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். உடனே அவர், யாராக இருந்தாலும், பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதி கடிதம் கொண்டுவர வேண்டும் என்று அனுமதி தராமல் மறுத்துள்ளார். கட்சி பெயரை கூறி மிரட்டியும் அனுமதி வழங்காததால் வேறு வழியின்றி மாணவ, மாணவிகளுடன் சிவராமன் திரும்பி சென்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

* என்சிசி அலுவலர் என ஏமாற்றிய மேலும் ஒரு நிர்வாகி சிக்கினார்

மாணவி பலாத்கார விவகாரத்தில் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா கொள்ளுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (39) என்பவர் கைதாகி உள்ளார். இவர் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றிய நாதக துணை தலைவராக இருந்தார். இந்த விவகாரம் வெளிவந்த பிறகு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.இவர் சிவராமனுடன் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு என்சிசி முகாம் என சென்றுள்ளார். அவர் தன்னை சேலம் மண்டல தேசிய மாணவர் படை பிரிவு அலுவலர் என கூறி ஏமாற்றி உள்ளது, விசாரணையில் தெரியவந்துள்ளது.

You may also like

Leave a Comment

13 − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi