கிருஷ்ணகிரியில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் சிறப்பு புலனாய்வுக்குழு உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: கிருஷ்ணகிரியில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு உண்மையான பதில்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன், காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே, எலி மருந்து சாப்பிட்டு உயிரிழந்துள்ளதாக கூறுகின்றனர். மேலும், அவரது தந்தை அசோக் குமாரும் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளதாக தெரிய வருகிறது.

இந்த இரண்டு மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக உள்ளன. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், சிவராமன் கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற கேள்வி எழுகிறது. உண்மையில் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனரா அல்லது யாரையோ காப்பாற்றும் முயற்சியாக, தந்தை, மகன் இருவரின் மரணங்களும் நிகழ்ந்துள்ளனவா என்ற பலத்த சந்தேகம் எழுகிறது. பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, இதுதொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்த கேள்விகளுக்கான உண்மையான பதில்களை வெளிக்கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்

கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்