கிருஷ்ணகிரி நாகரசம்பட்டியில் போலீசாரின் வாகன சோதனையில் யானை தந்தம் கடத்தி வந்த 4 பேர் கைது..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே நாகரசம்பட்டியில் போலீசாரின் வாகன சோதனையில் யானை தந்தம் கடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் அதிகளவில் வனப்பகுதி கொண்டிருக்கக்கூடிய மாவட்டமாக திகழ்கிறது. இந்த மாவட்டத்தில் அதிக அளவு வனப்பகுதியில் யானைகள் உள்ளன. சிறுத்தை, கரடி, மான் போன்ற வன விலங்குகளும் ஏராளமாக உள்ளது.

யானைகள் தந்தத்திற்காகவும் கொல்லப்படும் சம்பவங்கள் கடந்த காலங்களில் நடைபெற்று வருகிறது. மர்மமான முறையில் யானைகள் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாகரசம்பட்டி பகுதியை சேர்ந்த சிலர் யானை தந்தங்கள் இருப்பதாக சிலரிடம் விற்பனை செய்வதற்கு விலைபேசிவருவதாக தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி வனச்சரகர் ரவி தலைமையில் இரு குழுக்களாக பிரிந்து நேற்று இரவு வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்குபேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் நாகரசம்பட்டி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், செந்தில், கந்தன், நாகப்பன் ஆகிய 4 பேர் ஆகும்.

அவர்களிடம் சுமார் 2 யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த யானை தந்தங்கள் எப்படி கிடைத்தது என விசாரணை மேற்கொள்ளபட்டபோது தங்கள் நிலத்தில் வீடு கட்டுவதற்காக தோண்டிய போது இந்த யானை தந்தங்கள் கிடைத்ததாக தெரிவித்தனர். ஆனால் அவர்கள் சொல்லக்கூடிய கருத்து ஏற்று கொள்ளகூடிய வகையில் இல்லை.

இவை வேட்டையாடி கொண்டுவரப்பட்டதா, எந்த வனப்பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . மேலும் இந்த யானை தந்தங்களை யாருக்கு விற்பனை செய்வதற்காக விலைபேசி வந்தனர் என்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ரூ.30 லட்சம் மதிப்பிலான யானை தந்தங்களை தற்போது வனத்துறையினர் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கன்னியாகுமரி கோதயாறு அருகே யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: பொதுமக்கள் அச்சம்

உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் 121 பேர் இறந்த நிலையில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்திய சாமியார் தலைமறைவு

ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவர்கள் சென்ற மினி வேன் மரத்தில் மோதி விபத்து!!