கிருஷ்ணகிரி பட்டாசு கடை வெடிவிபத்து: சிறப்பு கூடுதல் மாவட்ட நிர்வாக நீதிபதி நியமனம்!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பட்டாசு கடை விபத்து தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு நிர்வாக நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். சிப்காட் நில எடுப்பு பிரிவின் தனி மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணைக்கு நியமிக்கப்பட்ட பவணந்தி சம்பவ இடத்தில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார். கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் கடந்த 29-ம் தேதி காலை பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

மேலும்,15-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திட சிறப்பு கூடுதல் மாவட்ட நிர்வாக நீதிபதியாக, சிப்காட் நிலம் எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி நியமித்து, மாவட்ட ஆட்சியர் சரயு உத்தரவிட்டுள்ளார். நியமனம் செய்யப்பட்ட 30 நிமிடங்களுக்குள், சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை அலுவலர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து வெடி விபத்து நடந்த இடத்தின் அருகே உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள், கடைகளின் உரிமையாளர்கள் உள்ளிட்டவர்களிடம் விபத்து தொடர்பாக கேட்டறிந்து, அதனை எழுத்துபூர்வமாக பதிவு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி விரிவான அறிக்கை அளிக்க உள்ளனர். மேலும், பட்டாசு கடை வெடி விபத்து நடந்த இடத்தில் இன்று (31ம் தேதி) பொக்லைன் உதவியுடன் அங்கிருந்த பொருட்கள் அகற்றப்பட்டுள்ளது.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை