வேலூர் : கிருஷ்ணகிரி- சென்னை சென்ற லாரி வேலூர் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் பேரல்களில் ஏற்றிச்சென்ற ஆசிட் தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடியது.கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை நோக்கி ஆசிட் பேரல்கள் ஏற்றிய லாரி வேலூர் வழியாக சென்று கொண்டிருந்தது. லாரியை கிருஷ்ணகிரியை சேர்ந்த ரவிச்சந்திரன்(50) என்பவர் ஓட்டிச்சென்றார்.
நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் பெருமுகை அருகே சென்றபோது தேசிய நெடுஞ்சாலை மேம்பால பணிக்காக மண் தடுப்பு மற்றும் பேரிகார்டுகள் மீது எதிர்பாராதவிதமாக மோதிய லாரி, சாலை நடுவில் குறுக்காக கவிழ்ந்தது.இதில் லாரியில் ஏற்றப்பட்டிருந்த ஆசிட் பேரல்கள் உருண்டு சாலையில் விழுந்தன. இதனால் பேரல்களில் நிரப்பப்பட்டிருந்த ஆசிட் முழுவதும் சாலையில் ஆறாக வழிந்து ஓடியது.
லாரி டிரைவர் ரவிச்சந்திரன் தூக்க கலக்கத்தில் மேம்பால பணிக்காக மண் தடுப்பு, பேரிகார்டு தடுப்புகள் இருப்பதையோ, பக்கவாட்டில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டிருப்பதையோ கவனிக்காமல் வந்ததே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே, தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி அனைத்து சாலைகளிலும் கல்வெர்டுகள் கட்டுமான பணியின்போது தடுப்புகள் வைத்து போக்குவரத்தை திருப்பும் நிலையில் அங்கு தகுந்த எச்சரிக்கை பலகைகளுடன், ரிப்ளக்டர்களும் வைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.இந்த விபத்து குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.