சென்னை: கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு அரசு மனநல ஆலோசனை வழங்கியது உள்ளிட்ட நடவடிக்கை பாராட்டுக்குரியது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். காவல்துறையின் விசாரணை முறையாக இல்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக சட்டப்பணிகள் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார். முகாமில் இருந்தபோது பள்ளி முதல்வர், தாளாளர் பாலியல் தொல்லை தந்ததாக மாணவி ஒருவர் வாக்குமூலம் அளித்தார் என அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவுப்படி பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுவிட்டது. 4 மாணவிகளின் பெற்றோர்கள் தங்களுக்கு இழப்பீடு வேண்டாம் என கூறியுள்ளனர் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.