சென்னை: ஆம்னி பேருந்துகளை கோயம்பேடு பணிமனையில் இருந்து இயக்கிக் கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும், புதிதாக தொடங்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து தான் இயக்கப்பட வேண்டும் என்று ஜனவரி 24ம் தேதி போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்களும், ஆம்னி பேருந்து சங்கமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, தமிழக அரசு தரப்பில், சென்னை நகரில் ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்கப்படும் வழித்தடங்களின் இரு வரைபடங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆம்னி பேருந்து நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ஆம்னி பேருந்து நிறுவனங்களின் பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்க வேண்டும் என்றார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், போரூர், சூரப்பட்டு ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம்.
கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதித்தால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதற்கு கட்டப்பட்டது என்ற கேள்வி எழும். ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முடிச்சூரில் 5 ஏக்கர் பரப்பில் ஆம்னி பேருந்துகளுக்கு அனைத்து வசதிகளுடன் பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, மார்ச் மாதம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கோயம்பேட்டை சுற்றி உள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளை (கேரேஜ்கள்) ஆம்னி பஸ்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், பயணிகளை ஏற்றி இறக்குவது போரூர் மற்றும் சூரப்பேடு டோல் பிளாசா நிறுத்தங்களில் மட்டுமே. தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லாமல் இயக்கப்படக் கூடாது என்று தனது இடைக்கால உத்தரவில் கூறியுள்ளார். மேலும், மறு உத்தரவு வரும் வரை புக்கிங் ஆப்களில் எவ்வித மாற்றங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.