Tuesday, September 17, 2024
Home » கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ரவுடிகள், மதுபிரியர்கள் விரட்டியடிப்பு: 24 மணி நேரமும் போலீசார் ரோந்து

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ரவுடிகள், மதுபிரியர்கள் விரட்டியடிப்பு: 24 மணி நேரமும் போலீசார் ரோந்து

by Suresh

அண்ணாநகர்: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கப்பட்ட பின்னர் கோயம்பேடு பேருந்து நிலையம் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இங்கு செயல்பட்டுவந்த ஹோட்டல்கள், டீக்கடைகள் அடுத்தடுத்து மூடப்பட்டு வருகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் வருகை குறைந்து விட்டதால் தற்போது ரவுடிகள், வழிப்பறி கொள்ளையர்கள் மற்றும் குடிமன்னர்கள் ஆகியோர் இங்கு பதுங்கிக்கொள்வதற்கு வசதியாக உள்ளது.

இதற்கு முற்றுபுள்ளி வைக்கவேண்டும் என்று கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் அருள்மணிமாறன் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றார். இந்த நிலையில், 3வது நாளாக நேற்றிரவு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பயணிகளை தவிர மற்றவர்களை போலீசார் விரட்டியடித்தனர். இதனால் ரவுடிகள், குடிமன்னர்கள் ஆகியோர் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதன்காரணமாக பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.பயணிகள் கூறியதாவது:

கோயம்பேடு பேருந்து நிலையம் காலியாக இருப்பதால் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ரவடிகள், திருட்டு, வழிப்பறி கொள்ளையர்கள் பதுங்குவதற்கு வசதியாக உள்ளது. எனவே, பொதுமக்கள், வியாபாரிகளின் நலன் கருதி பேருந்து நிலைய பகுதியில் ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்தவேண்டும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திருநங்கைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வெளிமாவட்டங்களுக்கு செல்லும் வாலிபர்களை குறிவைத்து பணம் பறிக்கின்றனர். இதுகுறித்து புதியதாக வந்த இன்ஸ்பெக்டர் அருள்மணிமாறனிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஆய்வு செய்து வெளியாட்களை விரட்டியடித்தனர். இதனால் நிம்மதி அடைந்துள்ளோம்.
இவ்வாறு தெரிவித்தனர்.

போலீசார் கூறுகையில், “கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ரவுடிகள், மதுபிரியர்கள், வழிப்பறி கொள்ளையர்கள், திருநங்கைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாகவும் இவற்றை தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் தெரிவித்தனர். இதன்படி நடவடிக்கை எடுத்து ரவுடிகளை விரட்டியடித்துள்ளோம். இனிமேல் 24 மணி நேரமும் போலீசார் ரோந்துவந்து கண்காணிப்பார்கள். எனவே, பயணிகள் பயப்பட தேவையில்லை. பிரச்னையென்றால் உடனடியாக புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

You may also like

Leave a Comment

twenty + fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi