Tuesday, July 2, 2024
Home » கோயம்பேடு, கிளாம்பாக்கம் உட்பட 6 இடத்தில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கம்

கோயம்பேடு, கிளாம்பாக்கம் உட்பட 6 இடத்தில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கம்

by MuthuKumar

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு, கே.கே.நகர், தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை முதல் வெளியூர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. இதையொட்டி சென்னை, கோவை உட்பட வெளியூர்களில் பணியாற்றுவோர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 12ம் தேதி (நாளை) முதல் 3 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 4,706 சிறப்புப் பேருந்துகள் என 3 நாட்களுக்கு மொத்தம் 11,006 பேருந்துகளும், திருச்சி, கோவை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து 8,478 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

இதன் மூலம், பொங்கல் பண்டிகைக்காக 3 நாட்களுக்கு சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து மொத்தம் 19,484 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.மேலும், சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்ல கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அதன்படி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகரில் இருந்து இயக்கப்படுகின்றன.

திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், கோவை, நெல்லை கோட்டங்களைச் சேர்ந்த பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுகிறது. திருச்சி, தஞ்சை, கரூர், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

மேலும், டிசம்பர் 12ம் தேதிக்கு முன்பு திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்கள், கோயம்பேடுக்கு பதில் கிளாம்பாக்கத்தில் இருந்து உரிய நேரத்தில் பயணம் செய்யலாம். நாளை முதல் 14ம் தேதி வரை அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்வதற்கு முன்பதிவு செய்ய ஏதுவாக கோயம்பேடு, கிளாம்பாக்கம், தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையங்களில் மொத்தம் 11 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், www.tnstc.in என்ற இணைதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம். மேலும், பேருந்துகள் இயக்கம் குறித்த தகவலை பெறவும், புகார் அளிக்கவும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 9445014450, 9445014436 ஆகிய அலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம். தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 18004256151 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்கலாம்.

பொங்கல் முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வர 16ம் தேதி முதல் 18 ம் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,830 சிறப்புப் பேருந்துகளும், பிற ஊர்களுக்கு 6,459 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

You may also like

Leave a Comment

nineteen − twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi