கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 24 மணி நேர குடிநீர் வசதி: பயணிகள் வரவேற்பு

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 24 மணி நேர குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை புறநகர் மற்றும் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களுக்கும் அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்வதால் 24 மணி நேரமும், கோயம்பேடு பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்படும்.

தற்போது தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 24 மணி நேர குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து சிஎம்டிஏ அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கோடை வெயில் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீர் குழாயில் 24 மணி நேரமும் தண்ணீர் வருவதால் பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குடிநீர் குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால் உடனடியாக சரிசெய்ய ஆட்களை வைத்து கண்காணித்து வருகிறோம்.

மேலும் பேருந்து நிலையத்தில் ஆண்கள், பெண்கள் இலவச கழிவறைகளை பயணிகள் பயன்படுத்துகின்றனர். குடிநீர் குழாய், இலவச கழிப்பறையில் தண்ணீர் வரவில்லை என்றால் பேருந்து நிலையத்தில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். புகாரின்படி, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும்,’’ என்றார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை