தற்போது தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 24 மணி நேர குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து சிஎம்டிஏ அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கோடை வெயில் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீர் குழாயில் 24 மணி நேரமும் தண்ணீர் வருவதால் பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குடிநீர் குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால் உடனடியாக சரிசெய்ய ஆட்களை வைத்து கண்காணித்து வருகிறோம்.
மேலும் பேருந்து நிலையத்தில் ஆண்கள், பெண்கள் இலவச கழிவறைகளை பயணிகள் பயன்படுத்துகின்றனர். குடிநீர் குழாய், இலவச கழிப்பறையில் தண்ணீர் வரவில்லை என்றால் பேருந்து நிலையத்தில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். புகாரின்படி, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும்,’’ என்றார்.