கோவில்பட்டி : கோவில்பட்டியில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 2வது முறையாக புகுந்து ரூ.7.5 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.கோவில்பட்டி கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் ஆனந்தராஜ் (30). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர், குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஜன்னல் வழியாக உள்ளே புகுந்த மர்மநபர், அங்கிருந்த பீரோவை திறந்து அதிலிருந்த செயின், வளையல், மோதிரம், நெக்லஸ் உள்ளிட்ட 15 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பியோடி விட்டார். இவற்றின் மதிப்பு ரூ.7.5 லட்சம் ஆகும்.
காலையில் தகவலறிந்த ஆனந்தராஜ், கோவில்பட்டி மேற்கு காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி மர்மநபரை தேடி வருகின்றனர். கடந்த 6 மாதத்திற்கு முன் ஆனந்தராஜ், இதேபகுதியில் மற்றொரு வீட்டில் குடியிருந்த போது வீட்டில் இருந்த 10 பவுன் நகையை மர்மநபர் திருடிச் சென்றார். அந்த வழக்கில் குற்றவாளி இன்னும் பிடிபடாத நிலையில் ஆனந்தராஜ் வீட்டில் மீண்டும் கொள்ளை நடந்திருப்பது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.