திருக்கழுக்குன்றம்: கொத்திமங்கலம் ஊராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொள்வதற்கு நேற்று மாலை ₹10 லட்சம் மதிப்பில் புதிய டிராக்டர் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்றத் தலைவர் பங்கேற்று, அவற்றை தூய்மை பணிக்கு வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்திமங்கலம் ஊராட்சியில் மொத்தமுள்ள 9 வார்டுகளில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டமக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள வீடுகளின் குப்பை, அந்தந்த பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கொட்டப்படுகிறது. அவற்றை ஊராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்கள் வாகனங்கள் மூலம் நாள்தோறும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து, உரக்கிடங்குகளுக்கு கொண்டு சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கொத்திமங்கலம் ஊராட்சியில் தூய்மைப் பணிகளை விரைவில் மேற்கொள்வதற்காக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ்,10 லட்சம் மதிப்பில் டிரைலருடன் கூடிய புதிய டிராக்டர் மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கனகம்மாள் சிறப்பு பூஜையுடன் புதிய டிராக்டரை தூய்மைப் பணிக்காக துவக்கி வைத்தார். இதில் சமூக ஆர்வலர் பிச்சைமுத்து, ஊராட்சி செயலர் முருகன், வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.