பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்று மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் அரசு மணல் குவாரி கடந்த 6 மாதங்களாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 பேர் கொண்ட குழுவினர், குவாரியில் உள்ள அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், மணல் விற்பனை தொடர்பான பதிவேடுகள், மணல் இருப்பு, ரசீது குறித்து காலை முதல் மாலை வரை தொடர்ந்து ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இருப்பினும் சோதனை தொடர்பான தகவலை தெரிவிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர். மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.