இம்பால்: மணிப்பூர் கலவரத்திற்கு மத்தியில் சட்டப்பேரவையின் ஒருநாள் கூட்டம் நேற்று நடந்தது. குக்கி இன சட்டப்பேரவை உறுப்பினர்கள் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். கலவரத்துக்கு பின் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் நேற்று காலை அவை கூடியது. அப்போது இன கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் “அமைதியே மாநிலத்தின் முன்னுரிமை என்பதால் அனைத்து வேறுபாடுகளையும் களைந்து, அமைதி, நல்லிணக்கம் ஏற்பட அனைத்து பிரச்னைகளைக்கும் அரசியலமைப்பு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் “ஜனநாயகத்தை காப்போம். கேலி பேசுவதை நிறுத்துங்கள்” என்று கூறி முழக்கமிட்டனர். அவை தலைவர் சத்யபிரதா சிங் அவர்களை அமைதி காக்கும்படி கூறினார். ஆனால் காங்கிரஸ் உறுப்பினர்களின் தொடர் கூச்சல் காரணமாக அவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.