கொல்கத்தா : கொல்கத்தாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ உடனே அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்தியாவின் மிக முக்கிய விமான நிலையமாக உள்ள இங்கு நாள் ஒன்று நூற்றுக்கணக்கான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். இந்த விமான நிலையத்தில் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் உள்ள சோதனை மையத்தில் பற்றி எறிந்த தீயால் பயணிகளும் விமான நிலைய பணியாளர்களும் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர்.தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து 3 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ அணைக்கப்பட்டதை தொடர்ந்து விமான நிலையத்தில் உடைமைகள் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கும் பணிகள் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கின. மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.