பெரம்பூர்: கொளத்தூரில் பழமை வாய்ந்த அருள் தரும் அமுதாம்பிகை சோமநாத சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் குடமுழுக்கு விழாவுக்கு முன்னதாக நடைபெறும் பாலாலயம் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. அப்போது பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகள் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க திருப்பணி தொடங்கப்பட்டது. இதில் விமான திருப்பணி, திருக்குள திருப்பணி, தரைத்தளம் அமைத்தல், வர்ணம் பூசுதல் மற்றும் பல்வேறு திருப்பணி வேலைகள் நடைபெற உள்ளன. ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற உள்ளன. திருப்பணிகள் அனைத்தும் முழுமை பெற்றவுடன் கும்பாபிஷேகம் நடக்கிறது. நேற்று நடந்த பாலாலயம் நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் முல்லை, அறங்காவலர் குழு தலைவர் மோகன் பாபு, அறங்காவலர்கள் கணேசன், பூமிநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.