கொளத்தூரில் ரூ. 3.84 கோடியில் கால்பந்து விளையாட்டு திடல், சிறுவர் பூங்கா திறப்பு ரூ. 5.95 கோடி மதிப்பில் 33 திட்ட பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 3.84 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து விளையாட்டு திடல் மற்றும் சிறுவர் பூங்காவை திறந்து வைத்து, ரூ. 5.95 கோடி மதிப்பீட்டிலான 33 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 3 கோடியே 84 லட்சத்து 18 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து விளையாட்டு திடல் மற்றும் சிறுவர் பூங்காவை திறந்து வைத்து, ரூ. 5 கோடியே 94 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பீட்டிலான 33 மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும்,  அகஸ்தியர் அறக்கட்டளை சார்பில் கலைஞர் நூற்றாண்டு கட்டணமில்லா உயர் சிகிச்சையுடன் கூடிய கண் மருத்துவமனையும், அனிதா அச்சீவர்ஸ் அகாடமி தையல் பயிற்சி மையத்தையும் திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திரு.வி.க. நகர், பல்லவன் சாலையில் சென்னை மாநகராட்சி சார்பில் சிங்காரச் சென்னை 2.0 நிதியிலிருந்து ரூ. 3 கோடியே 30 லட்சம் செலவில், பார்வையாளர் மாடம், நடைபாதை, இறகுபந்து கூடம், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள செயற்கை புல் தரையுடன் கூடிய கால்பந்து விளையாட்டுத் திடலை தமிழ்நாடு முதல்வர் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, திரு.வி.க நகர் 8வது தெருவில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 54 லட்சத்து 18 ஆயிரம் செலவில் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், திறந்தவெளி உடற்பயிற்சிக்கூடம், நடைபாதை, இருக்கை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார். திரு.வி.க. நகர் மண்டலம், வி.வி.நகர் 1வது தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜி.கே.எம் காலனி 27வது தெருவில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி மையத்தை ரூ. 5 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, ஜவஹர் நகர் 1வது வட்ட சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ரூ. 9 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் யோகா பயிற்சி மேடை அமைத்தல், கான்கிரீட் நாற்காலி உள்ளிட்ட இதர விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தும் பணி, ஜவஹர் நகர் 2வது குறுக்கு தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான உடற்பயிற்சி கட்டிடத்தை ரூ. 10 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பீட்டில் பழுது மற்றும் மேம்படுத்தும் பணி, ரங்கசாயீ தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நடுநிலைப் பள்ளியில் ரூ. 5 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பீட்டில் சமையல் கூடத்தை மேம்படுத்தும் பணி, ரங்கசாயீ தெருவில் உள்ள விளையாட்டு மைதானமங ரூ. 7 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, ஜெகநாதன் தெருவில் உள்ள வார்டு-69 அலுவலகத்தை ரூ. 7 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்தார்.

மதுரை தெருவில் உள்ள உடற்பயிற்சி கட்டிடத்தை ரூ. 8 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, சந்தியப்பதாஸ் தெருவில் உள்ள உடற்பயிற்சி கட்டிடத்தை ரூ. 8 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, வசந்தா கார்டன் மதுரை தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் ரூ. 9 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் மதிய உணவு திட்ட மையத்தை மேம்படுத்தும் பணி மற்றும் வசந்தா கார்டன் மதுரை தெருவில் ரூ. 22 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பீட்டில் பல்நோக்கு மையக் கட்டிடம் கட்டும் பணி, சின்ன குழந்தை பிரதான சாலையில் உள்ள உடற்பயிற்சி கட்டிடத்தை ரூ. 8 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, மதுரை சாமி மடம் தெருவில் உள்ள உடற்பயிற்சி கட்டிடத்தை ரூ. 26 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிளை தொடங்கி வைத்தார். கனகர் தெருவில் உள்ள கனகர் குளத்தை சுற்றி ரூ. 29 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபாதை மற்றும் சுற்றுசுவர் அமைக்கும் பணி, பெரியார் நகர் 20வது தெருவில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காவில் ரூ. 29 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் சுற்றுசுவர் அமைத்தல் மற்றும் இதர மேம்படுத்தும் பணி, பல்லவன் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி சாலையோர பூங்காவில் ரூ. 26 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபாதை, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், இதர பழுது பார்த்தல் மற்றும் மேம்படுத்தும் பணி, கோட்டம்-67ல் உள்ள பல்வேறு உள் கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய பல்நோக்கு கட்டிடத்தை ரூ. 30 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டும் பணி, திரு.வி.க நகர் பிரதான சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி தொடக்க பள்ளியை ரூ. 32 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

எல்சி1 பூங்காவில் ரூ. 37 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பீட்டில் புதியதாக மழைநீர் சேகரிக்கும் குளம் அமைத்தல் மற்றும் செயற்கை நீரூற்று, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் அமைக்கும் பணி, அஞ்சுகம் நகர் 18வது தெருவில் ரூ. 28 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் புதியதாக துப்புரவு ஆய்வாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் கட்டிடம் கட்டும் பணி, வெற்றி நகரில் உள்ள தியாகராஜன் தெருவில் ரூ. 34 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பீட்டில் கோட்ட அலுவலகக் கட்டிடம் கட்டும் பணி என மொத்தம் ரூ. 5 கோடியே 94 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பீட்டிலான 33 புதிய மேம்பாட்டுப் பணிகளுக்கு தமிழ்நாடு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், துணை மேயர் மகேஷ்குமார், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ரங்கநாதன், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், நகர் ஊரமைப்பு இயக்குநர் கணேசன்,  அகஸ்தியர் அறக்கட்டளை தலைவர் ரமேஷ், சங்கர நேத்ராலயா தலைமை நிர்வாகிகள் டாக்டர் சுரேந்தரன் மற்றும் டாக்டர் கிரிஷ் சிவ ராவ், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரிகள் நரேந்திரன் மற்றும் ஹெலன், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* பெண்கள் உடற்பயிற்சி மையம்

திரு.வி.க நகர் பிரதான சாலையில் அமைந்துள்ள பெண்கள் உடற்பயிற்சி கட்டிடத்தை ரூ. 17 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, ரூ. 12 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டில் உசேன் காலனியில் உள்ள அம்மா உணவகத்தின் பழுதடைந்த சுற்று சுவரை புதியதாக கட்டும் பணி, குடிநீர் குழாய் அமைத்தல் மற்றும் மின்சார வசதிகள் அமைக்கும் பணி, நேர்மை நகர் பிரதான சாலையில் உள்ள நேர்மை நகர் மயான பூமியை ரூ. 17 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி மற்றும் ரூ. 27 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பீட்டில் 16ம் நாள் காரிய மண்டபம் அமைக்கும் பணி, மதுரை சாமி மடம் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி உருது தொடக்க பள்ளியை ரூ. 21 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, பல்லவன் சாலையில் அமைந்துள்ள வள மீட்பு மையத்தை ரூ. 13 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டிலும், சென்னை மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார மையத்தை ரூ. 13 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பீட்டிலும் மேம்படுத்தும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

* நலத்திட்ட உதவிகள்

ஜவஹர் நகர் 1வது சர்குலர் சாலையில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தில்  அகஸ்தியர் அறக்கட்டளை சார்பில் கலைஞர் நூற்றாண்டு கட்டணமில்லா உயர் சிகிச்சை வசதிகளுடன் கூடிய கண் சிகிச்சை மையத்தையும், அக்கட்டிடத்தின் முதல் தளத்தில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் தையல் பயிற்சி மையத்தையும், கொளத்தூர், ஜவஹர் நகர், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள், பயனாளிகளுக்கு மருத்துவ உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாவு அரவை இயந்திரம், காது கேட்டும் கருவி, தையல் இயந்திரம் என 55 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

* அம்மா உணவக மேம்பாடு

ஜி.கே.எம் பிரதான சாலையில் உள்ள மயான பூமியை ரூ. 18 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் பழுது பார்த்தல் மற்றும் மேம்படுத்தும் பணி, வி.வி. நகர் 2வது தெருவில் உள்ள விளையாட்டு மைதானத்தை ரூ. 16 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, கே.சி. கார்டன் 2வது தெருவில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள சமையல் கூடத்தை ரூ. 6 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பீட்டில் பழுது பார்த்தல் மற்றும் மேம்படுத்தும் பணி, பார்த்தசாரதி தெருவில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் ரூ. 21 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பீட்டில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கேரம் மற்றும் சதுரங்க விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி, அஞ்சுகம் நகர் 18வது தெருவில் உள்ள அம்மா உணவகத்தை ரூ. 5 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, முகமது உசேன் காலனி 5வது தெருவில் உள்ள புதிய பல்நோக்கு கட்டிடத்தை ரூ. 25 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டும் பணிகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு