சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடந்த பொங்கல் விழாவில் 3,200 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவிகள் சமைத்த பொங்கலை ருசித்து மகிழ்ந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜவகர் நகர் பகுதியில் உள்ள தனது சட்டமன்ற அலுவலகத்திற்கு வந்து, மனைவி துர்கா ஸ்டாலினுடன் பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். இதில் மாணவிகள் சமைத்த பொங்கலை ருசித்து மகிழ்ந்தார். மேலும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரம் பேருக்கு வேட்டி, சேலை, கரும்பு, இனிப்பு மற்றும் பொங்கல் தொகுப்புகளை வழங்கினார்.
பின்னர் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பல்லவன் சாலையில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு 2,200 பேருக்கு வேட்டி, சேலை, பொங்கல் தொகுப்பு, கரும்பு மற்றும் உதவித்தொகை வழங்கினார். இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு. வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன், சென்னை மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், வெற்றி அழகன், பகுதிச் செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் சந்துரு, மகேஷ் குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.