பெரம்பூர்: சென்னை கொடுங்கையூர் பகுதியில் இரவு நேரங்களில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், நேற்று மதியம் 2 மணி அளவில் கொடுங்கையூர் எருக்கஞ்சேரி எத்திராஜ் சாலை சந்திப்பு பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த திருநங்கை ஒருவரை போலீசார் மடக்கி சோதனை செய்தபோது அவரிடம் சிறு, சிறு பொட்டலங்களாக 45 பொட்டலங்களில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
இதில் கொடுங்கையூர் எருக்கஞ்சேரி காந்தி நகர் பகுதியை சேர்ந்த திருநங்கை ஷீபா (19) என்று தெரிந்தது. இவரிடம் விசாரணை மேற்கொண்டதில், கஞ்சாவை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி கைலாசம் தெரு பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்கின்ற ஹரி (22) என்பவரிடம் இருந்து வாங்கியதாக தெரிவித்தார். இதையடுத்து நேற்று மாலை ஹரிஹரணையும் கைது செய்தனர். இதன்பிறகு இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் அஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.