Friday, October 4, 2024
Home » கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு வங்கி அதிகாரி, பூசாரியிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை: ரூ.50 கோடி பழைய நோட்டு மாற்றம், இசிஆரில் ரிசார்ட் குறித்து கிடுக்கிப்பிடி

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு வங்கி அதிகாரி, பூசாரியிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை: ரூ.50 கோடி பழைய நோட்டு மாற்றம், இசிஆரில் ரிசார்ட் குறித்து கிடுக்கிப்பிடி

by Ranjith

கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக வங்கி அதிகாரி, போயஸ் கார்டன் பூசாரியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இசிஆரில் ரிசார்ட், ரூ. 50 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றம் குறித்து கேள்வி கேட்டு பதிலை பெற்றுள்ளனர். ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் மற்றும் பங்களாவில் நடந்த காவலாளி கொலை, ஆவணங்கள் கொள்ளை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 300க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் போயஸ் கார்டனில் பூசாரியாக வேலை செய்து வந்த விக்னேஸ்வரன் மற்றும் புதுச்சேரியில் உள்ள தனியார் வங்கி உதவி மேலாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.‌ பூசாரியிடம் கோயிலுக்கு வந்து செல்லும் நபர்கள், அரசியல் பிரமுகர்கள் குறித்து போலீசார் விசாரித்தனர். வங்கி உதவி மேலாளரிடம், கொடநாடு எஸ்டேட்டில் உள்ளவர்களின் வங்கிக்கணக்கு, குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டவர்களின் வங்கிக்கணக்கு விவரம், பண பரிவர்த்தனை குறித்த விவரங்களை கேட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட சிலர் புதுச்சேரியில் உள்ள வங்கியில் கணக்கு வைத்து பண பரிவர்த்தனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வங்கிக்கணக்கு விவரங்கள் அறிய இந்த விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. ஜெயலலிதா இறந்த பின்னர் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் பல்வேறு பகுதிகளில் சொத்துக்கள் வாங்கியதாக தகவல் வெளியானது. கொடநாடு வழக்கிற்கு பின்னர் இந்த விவரங்கள் தெரியவந்த நிலையில் போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.

சிபிசிஐடி போலீசார் விசாரித்தபோது சசிகலா தரப்பினர் புதுச்சேரி தனியார் வங்கி மூலமாக கடன் பெற்றதாக தெரியவந்தது. 2017ம் ஆண்டு கிழக்கு கடற்கரை சாலையில் ரிசார்ட்டுடன் கூடிய நிலம் வாங்க சசிகலா ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. அதற்காக இந்த வங்கியில் கடன் கேட்டது தொடர்பாகவும், அந்த சமயத்தில் ரூ.50 கோடி வரை பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டது குறித்தும் வங்கி உதவி மேலாளரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி பதில்கள் பெறப்பட்டதாக தெரிகிறது.

You may also like

Leave a Comment

7 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi